ADDED : நவ 28, 2024 11:58 PM
கலபுரகி; பெண் சிறை கண்காணிப்பாளரை குண்டு வைத்து கொல்வதாக மிரட்டிய மர்மநபரை போலீசார் தேடுகின்றனர்.
கலபுரகி மத்திய சிறையில் கைதிகளுக்கு கஞ்சா எளிதில் கிடைப்பதாகவும், சிறை ஊழியர்களை கையில் வைத்து கொண்டு தாங்கள் நினைப்பதை கைதிகள் சாதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறையில் போலீசார் சோதனை நடத்தினர். கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், கலபுரகி சிறையில் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற அனிதா, சிறைக்குள் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதனால், கைதிகளுக்கு கஞ்சா கிடைக்கவில்லை. இதனால் கண்காணிப்பாளர் அனிதா மீது கைதிகள் கோபத்தில் உள்ளனர்.
கலபுரகி டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மொபைல் நம்பருக்கு, நேற்று காலை மர்ம நபர் ஒருவர் பேசினார்.
'சிறை கண்காணிப்பாளர் அனிதாவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்; அவரை குண்டு வைத்து கொல்வோம்' என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் போலீசார் உஷாராகி உள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் எந்த இடத்தில் உள்ளதோ அந்த இடத்தில் மட்டுமே காரை நிறுத்த வேண்டும் என்று அனிதாவின் டிரைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடுகின்றனர்.