துாய்மை இந்தியாவால் நாட்டின் செழிப்புக்கு... புதிய பாதை! உலகின் பெரிய இயக்கம் என மோடி பெருமிதம்
துாய்மை இந்தியாவால் நாட்டின் செழிப்புக்கு... புதிய பாதை! உலகின் பெரிய இயக்கம் என மோடி பெருமிதம்
ADDED : அக் 03, 2024 01:02 AM

புதுடில்லி, ''நாடு செழுமை அடைவதற்கு, துாய்மை இந்தியா திட்டம் புதிய பாதையை வகுத்து தந்துள்ளது. 21ம் நுாற்றாண்டில் உலகின் மிகவும் வெற்றிகரமான மிகப் பெரும் இயக்கமாக இது அமைந்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
'ஸ்வச் பாரத்' எனப்படும் துாய்மை இந்தியா திட்டம், 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், துாய்மைப் பணிகள் தொடர்பான, 10,000 கோடி ரூபாய் திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
அடுத்த 1,000 ஆண்டுக்குப் பின்னும், 21ம் நுாற்றாண்டில் இந்தியா குறித்து பேசப்படும்போது, துாய்மை இந்தியா திட்டம் நிச்சயம் நினைவில் வரும்.
திட்டத்தின் பலன்
இந்த 21ம் நுாற்றாண்டில் உலகின் மிகப் பெரிய மக்கள் இயக்கமாக இது அமைந்துள்ளது. ஒவ்வொருவரும் மிகவும் ஆர்வமுடன் இதில் பங்கேற்றனர்.
இந்த திட்டத்தின் வெற்றி ஒவ்வொருவரின் வெற்றியாகும். கடந்த, 15 நாட்களில் நாடு முழுதும், 27 லட்சம் துாய்மை இயக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன; 28 கோடி மக்கள் பங்கேற்றனர்.
பொது சுகாதாரம் மற்றும் செழிப்புக்கு புதிய பாதையை இந்த திட்டம் வகுத்து தந்துள்ளது.
முந்தைய ஆட்சியின்போது, துாய்மைப் பணி, கழிப்பறைஆகியவை ஒரு தேசிய பிரச்னையாக பார்க்கப்படவில்லை.
ஒரு பிரதமரின் முதல் வேலை, சாதாரண மக்களின் வாழ்க்கை தரத்தை சுலபமாக்குவதுதான்.
கழிப்பறைகள், குப்பைகள், துாய்மை குறித்து நான் பேசியபோது கேலி செய்தனர். தற்போது அந்த திட்டத்தின் பலன்களை கண்கூடாக மக்கள் பார்க்கின்றனர்.
நாட்டில், 10 ஆண்டுகளுக்கு முன், 60 சதவீத மக்கள் பொது இடங்களை அசுத்தப்படுத்தி வந்தனர். இது, தலித், பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்களை இழிவுபடுத்துவதாகும். மேலும் பெண்களின் கண்ணியத்துக்கும் எதிரானது.
வாழ்நாள் ஒழுக்கம்
சர்வதேச ஆய்வுகளின்படி, துாய்மை இந்தியா திட்டத்தால், ஆண்டுக்கு, 70,000 குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டப்பட்டதால், 90 சதவீத பெண்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரங்களின்படி, 2014ல் இருந்து, 2019க்குள், வயிற்றுபோக்கால் மூன்று லட்சம் பேர் உயிரிழப்பது தடுக்கப்பட்டுள்ளது.
மேலும் துாய்மை இந்தியா திட்டம், துாய்மைப் பணியாளர்கள் மீது மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. துாய்மை என்பது ஒரு நாள் மட்டும் செய்வதல்ல. அதை,வாழ்நாள் ஒழுக்கமாக அனைவரும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.