குறும்புக்கார மகனை கட்டுப்படுத்த சங்கிலியில் கட்டி போட்ட பெற்றோர்
குறும்புக்கார மகனை கட்டுப்படுத்த சங்கிலியில் கட்டி போட்ட பெற்றோர்
ADDED : பிப் 22, 2024 11:24 PM

ஹாசன்: மகனின் கோபத்தை கட்டுப்படுத்த முடியாத பெற்றோர், அவரை வீட்டிலேயே இரும்பு சங்கிலியால் கட்டி அடைத்து வைத்திருந்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
ஹாசன் மாவட்டம் சக்லேஸ்புராவை சேர்ந்தவர்கள் அமீர் உசேன் - ஹசீனா பானு. இருவரும் காபி தோட்டத்தில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு ஏழு குழந்தைகள். இவர்களின் ஆறாவது மகன் உபைதுல்லா, 11. மிகவும் குறும்புக்காரன்; அதிகம் கோபமும் படுவார்.
வீட்டில் ஏதாவது சேட்டை செய்வது, கோபத்தில் பொருட்களை துாக்கி எறிவது என்றிருப்பார். இவரை கட்டுப்படுத்த, இடுப்பில் இரும்பு சங்கிலி கட்டி, அதை காலுடன் இணைத்து, வீட்டில் பூட்டி வைத்திருப்பர்.
பெற்றோர், காலையில் வேலைக்கு சென்றால், மதியம் வீட்டுக்கு வந்து மகனுக்கு உணவளித்த பின், மீண்டும் பணிக்கு சென்றுவிடுவர்.
இது போன்று நேற்று முன்தினம் மகனை கட்டி வைத்து விட்டு சென்றனர். எப்படியோ தப்பிய சிறுவன், சாலை ஓரத்தில் அமர்ந்திருந்தான். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், சிறுவனை மீட்டு பெண்கள், குழந்தைகள் நல துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பெற்றோரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கட்டப்பட்ட சங்கிலியுடன் சிறுவன் உபைதுல்லா. இடம்: ஹாசன்.