திரைப்பட இயக்குனர் குடும்பத்தில் விரிசல் இரு தரப்பினரும் போலீசில் பரபரப்பு புகார்
திரைப்பட இயக்குனர் குடும்பத்தில் விரிசல் இரு தரப்பினரும் போலீசில் பரபரப்பு புகார்
ADDED : ஜன 29, 2024 07:18 AM

பெங்களூரு: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கன்னட திரைப்பட இயக்குனர் மன்சோர், அவரது குடும்பத்தினர் மீது போலீசில் மனைவி புகார் அளித்துள்ளார். பதிலுக்கு கணவரும் புகார் செய்துள்ளார்.
கன்னடத்தில் ஆக்ட் 1978, 19.20.21 போன்ற வித்தியாசமான திரைப்படத்தை இயக்கியவர், இயக்குனர் மஞ்சுநாத் என்ற மன்சோர். இவருக்கும், அகிலா என்பவருக்கும் கடந்த 2021 ல் திருமணம் நடந்தது.
இந்நிலையில், சுப்ரமண்யபுரா போலீசில், மன்சோரின் மனைவி அகிலா வரதட்சணை புகார் அளித்து உள்ளார்.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
என் கணவர் மஞ்சுநாத், மாமியார் வெங்கடலட்சுமி, கணவரின் மூத்த சகோதரி ஹேமலதா ஆகியோர் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துகின்றனர். வீட்டில் இருந்து வரதட்சணை பணம் கொண்டு வருமாறு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
எங்கள் திருமணத்தின் போது, தங்க வளையல், செயின், வைர நிச்சயதார்த்த மோதிரம் என 180 கிராம் தங்க நகைகள், 1.5 கிலோ வெள்ளி நகைகள், ஒன்பது லட்சம் ரூபாய் ரொக்கம் கொடுக்கப்பட்டது. திருமணத்துக்கு 30 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது.
திருமணம் முடிந்து, 1.5 லட்சம் ரூபாய்க்கு சோபா, டிவி, மிக்சி, கிரைண்டர், வாஷிங் மிஷின் போன்றவற்றை என் குடும்பத்தினர் வழங்கினர்.
காதலிக்கும் போது, 2.21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜாவா பைக்கும், 10,600 ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனும் கொடுத்தேன்.
முதலில் என்னை நன்றாக பார்த்து கொண்டனர். பின், கணவரின் அக்கா வந்து என்னிடம் பேச ஆரம்பித்தார். என் கணவர் புதிய திரைப்படம் எடுக்க பணம் கேட்ட போது, எனது குடும்பத்தினர் கடன் வாங்கி, 10 லட்சம் ரூபாய் கொடுத்தனர்.
பிறகு மீண்டும் வற்புறுத்தியதால், 76,000 ரூபாய்க்கு மொபைல் போன் வாங்கி கொடுத்தேன். இப்போது 30 லட்சம் ரூபாய் மதிப்பு உள்ள கார் தர வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலடியாக, கணவர் மன்சோரும் புகார் அளித்துள்ளார்.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
மனநலம் பாதிக்கப்பட்ட என் மனைவி, என்னை தாக்கி, தற்கொலைக்கு முயன்று, பொய்யான அவதுாறு பரப்புகிறார். என் மனைவியின் சகோதரரர்கள், பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.
அகிலாவுக்கு கூடுதல் சிகிச்சை தேவை என டாக்டர்கள் கூறினர். அவர் மிகவும் பிடிவாதமாக இருந்ததால், எனது தாயை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி, என்னை தொடர்ந்து தாக்கி வந்தார்.
அவருக்கு புரிய வைக்க அனைத்து முயற்சிகளையும் செய்தேன். எந்த பலனும் கிடைக்கவில்லை. திருமணத்தின் போதும், திருமணத்துக்கு பின்னரும், நான் வரதட்சணை வாங்கவில்லை.
இதுவரை மனைவி வீட்டில் இருந்து பணம், நகை, வாகனம் எதுவும் வரவில்லை. என்னை தாக்கி விட்டு, என் மனைவி தற்கொலைக்கு முயற்சித்ததற்கு ஆதாரம் உள்ளது. என் மனைவிக்கு உளவியல் சிகிச்சை தேவைப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இரு புகார்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.