ஒரேயொரு விவாத நிகழ்ச்சி; ஒட்டுமொத்த ஆந்திராவும் கொதிப்பு
ஒரேயொரு விவாத நிகழ்ச்சி; ஒட்டுமொத்த ஆந்திராவும் கொதிப்பு
ADDED : ஜூன் 10, 2025 01:22 AM

ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான, 'சாக் ஷி' டிவி செய்தி சேனலில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கூறப்பட்ட கருத்து, மாநிலம் முழுதும் போராட்டங்களை துாண்டி உள்ளது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீனிவாச ராவ், 70, கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகராக ஹைதராபாத் இருந்தது. 2014ல், ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவானபோது, தலைநகர் ஹைதராபாத் கைவிட்டு போனது. நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்ற நிலையில், தெலுங்கானாவுக்கே ஹைதராபாத் சொந்தம் என, தீர்ப்பும் அளிக்கப்பட்டது.
எதிர்ப்பு
ஆந்திராவில் தற்போது ஆட்சியில் உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு, அமராவதி மாவட்டத்தை தலைநகராக அறிவித்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இங்கு 2019 - 2024 வரை ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, அமராவதியை தலைநகராக்க எதிர்ப்பு தெரிவித்தார். அவரது ஆட்சியில், மூன்று தலைநகரங்கள் என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து, அத்திட்டம் கைவிடப்பட்டது.
தலைநகர் விவகாரத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு - முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இடையே, 10 ஆண்டுகளாக பனிப்போர் நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான, சாக் ஷி டிவி செய்தி சேனலில், சமீபத்தில் நடந்த விவாத நிகழ்ச்சி, ஆந்திரா முழுதும் போராட்டங்களை துாண்டி விட்டுள்ளது.
சாக் ஷி டிவி சேனலில், 'தெலுங்கு டிவி டாக் ஷோ' என்ற நிகழ்ச்சி நடந்தது. அங்கு பணிபுரியும் மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீனிவாச ராவ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கிருஷ்ணம்ராஜு என்பவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
தலைமறைவு
நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பான நிலையில், ''விபசாரத்தின் தலைநகர் அமராவதி,'' என, கிருஷ்ணம்ராஜு குறிப்பிட்டார். ''இது சிக்கலை உருவாக்கும். இதைப் பற்றி பேச வேண்டாம்,'' எனக் கூறிய பத்திரிகையாளர் ஸ்ரீனிவாச ராவ், அவரை கண்டிக்கவில்லை; அரங்கத்தில் இருந்து வெளியேற்றவில்லை. தொடர்ந்து பேசிய கிருஷ்ணம்ராஜு, அமராவதி மாவட்டத்தை இழிவுபடுத்தி பேசியதாகக் கூறப்படுகிறது.
கிருஷ்ணம்ராஜுவின் இந்த கருத்து, ஆந்திரா முழுதும் நேற்று போராட்டங்களை துாண்டியது. சாக் ஷி டிவி குழுமத்தின் தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி, அவரது மனைவி பாரதி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, ஏராளமான பெண்கள் உள்ளிட்டோர் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளும் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜ., நிர்வாகிகளும் போராட்டத்தில் குதித்ததால், ஆந்திரா முழுதும் அனல் பறந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, ''ஜெகன்மோகன் ரெட்டி, அவரது மனைவி பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார்.
தெலுங்கு தேசம் நிர்வாகிகள் கூறுகையில், 'இது தனிப்பட்ட நபரின் கருத்து அல்ல. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசின் மனநிலையையே கிருஷ்ணம்ராஜு வெளிப்படுத்தி உள்ளார். தலைநகராக அமராவதி ஆவது ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிடிக்கவில்லை. இதன் பின்னால் பெரிய சதி உள்ளது' என்றனர்.
இதற்கிடையே, விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மூத்த பத்திரிகையாளர் ஸ்ரீனிவாச ராவை, ஹைதராபாதில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஆந்திர போலீசார் நேற்று கைது செய்தனர். சர்ச்சை கருத்து தெரிவித்த கிருஷ்ணம்ராஜு, தலைமறைவாக உள்ளார்.
அவரை பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. ஆந்திராவில் தலைநகர் தொடர்பாக சந்திரபாபு நாயுடு - ஜெகன்மோகன் ரெட்டி இடையே மீண்டும் யுத்தம் துவங்கி உள்ளது.
- நமது சிறப்பு நிருபர் -