கிரிக்கெட் விளையாடாமல் மும்பை பயணம் முழுமை பெறாது: ரிஷி சுனக்
கிரிக்கெட் விளையாடாமல் மும்பை பயணம் முழுமை பெறாது: ரிஷி சுனக்
ADDED : பிப் 02, 2025 08:44 PM

மும்பை: 'டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடாமல், மும்பைக்கு செல்லும் எந்த பயணமும் முழுமை பெறாது,' என்று பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.
இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனும், பிரிட்டன் முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக் இன்று மும்பைக்கு வருகை தந்தார். ஜிம்கானாவின் ஆண்டுவிழா கொண்டாட்டம் இன்று நடந்தது.1885ம் ஆண்டில் நிறுவப்பட்ட பார்சி ஜிம்கானா, மும்பையின் கிரிக்கெட் கலாசாரத்தின் ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது.
ஜிம்கானாவின் ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் கூட்டத்தினரிடையே ரிஷி சுனக் பேசுகையில், ''இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க நிறுவனத்தைக் கொண்டாடும் விழாவில் நான் இங்கு இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது,'' என்றார். அதை தொடர்ந்து, டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடும் புகைப்படத்தைப் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட அவர், புகைப்படத்தில்,தான் விளையாடியபோது வெள்ளை சட்டை,கருப்பு பேன்ட் மற்றும் விளையாட்டு காலணிகளை அணிந்திருந்தார். பிரிட்டீஷ் முன்னாள் பிரதமர் கிரிக்கெட் விளையாடுவதை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் மைதானத்தில் திரண்டனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரல் ஆகியது.
அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மும்பையில் உள்ள புகழ்பெற்ற பார்சி ஜிம்கானாவில் பார்வையாளர்கள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, நானும் சிறிது நேரம் டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாட்டு இல்லாமல் மும்பை பயணமும் முழுமையடையாது என்று பதிவிட்டுள்ளார்.