வயதை தீர்மானிக்க ஆதாரை ஆவணமாக கருத முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
வயதை தீர்மானிக்க ஆதாரை ஆவணமாக கருத முடியாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
ADDED : அக் 25, 2024 02:14 AM

புதுடில்லி:: ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் அட்டை அதிகார ஆவணமாக கருத முடியாது என, விபத்தில் உயிரிழந்த ஒருவரின் இழப்பீடு தொடர்பான அப்பீல் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வங்கி கணக்கு துவங்க, சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெற, பத்திரப்பதிவு, மொபைல் சிம்கார்டு பெற உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அவசியமாக உள்ளது.
இந்நிலையில் 2015ம் ஆண்டு, ஹரியானாவின் ரோதாக்கை சேர்ந்தவர் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் அவரின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கில் உயிரிழந்தவரின் பள்ளி சான்றிதழில் 01.10. 1970 என்ற பிறந்த தேதியை வைத்து ரூ.19,35,000 இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது.
இதனை எதிர்த்து பஞ்சாப் -ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உயிரிழந்தவரின் ஆதாரில் 01,01. 1969 என உள்ள பிறந்த தேதியை வைத்து இழப்பீட்டு தொகையை ரூ. 9,22,000 ஆக குறைத்து தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அப்பீல் வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல், உஜ்ஜால் புயன் இரு தரப்பு வாதங்களை கேட்டனர்.
அவர்கள் அளித்த தீர்ப்பு, 2015-ம் ஆண்டின், சிறார் நீதி சட்டம் 94-வது பிரிவின் படி பார்த்தால், பள்ளி இறுதி (எஸ்.எஸ்.எல்.சி.,) சான்றில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி அடிப்படையில் தான் ஒருவரது வயது தீர்மானிக்கப்பட வேண்டும்.
ஆதார் அட்டை, ஒருவரை பற்றிய அடையாளத்தை உறுதி செய்யவே பயன்படுத்த முடியும். பிறந்த தேதியை ஆதாரமாக கருத முடியாது.இதன்படி ஒருவரின் வயதை தீர்மானிக்க ஆதார் ஆவணம் அல்ல. இவ்வாறு தீர்ப்பளித்த நீதிபதிகள் பஞ்சாப்- ஹரியானா உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தனர்.
******************

