பா.ஜ., வழியில் ஆம் ஆத்மி அரசு: பஞ்சாபில் 'புல்டோசர்' அதிரடி
பா.ஜ., வழியில் ஆம் ஆத்மி அரசு: பஞ்சாபில் 'புல்டோசர்' அதிரடி
ADDED : பிப் 26, 2025 06:45 AM

சண்டிகர்: பஞ்சாபில், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் வீடுகளை, 'புல்டோசர்' வைத்து ஆம் ஆத்மி அரசு இடித்து தள்ளியது.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால், குற்றங்களும் அதிகரித்துஉள்ளன. இதை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த வாரம், போதை பொருள் கடத்தல்காரர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 5 கிலோவுக்கும் அதிகமான 'ஹெராயின்' பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் மாபியாக்களாக செயல்பட்டு வரும் சோனு மற்றும் ராகுல் ஹன்ஸ் ஆகியோருக்கு சொந்தமான பங்களாக்களை புல்டோசர் வைத்து பஞ்சாப் போலீசார் இடித்து தள்ளினர்.
கடந்த மூன்றாண்டுகளாக போதைப்பொருள் கடத்தி வரும் சோனு, சட்டவிரோதமாக கட்டிய பங்களாவை போலீசார் நேற்று முன்தினம் இரவு இடித்தனர். மற்றொரு சம்பவத்தில், லுாதியானாவில் உள்ள கடத்தல்காரர் ராகுல் ஹன்சின் வீட்டை போலீசார் நேற்று இடித்து தள்ளினர்.
சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளின் வீடுகளை புல்டோசர் வைத்து இடிக்கும் நடவடிக்கையை உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானாவில் பா.ஜ., அரசு செயல்படுத்தியது. இதை ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அப்போது விமர்சித்தன. ஆனால், பஞ்சாபில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்க, அதே அதிரடியை கையில் எடுக்க வேண்டிய நிலைக்கு ஆம் ஆத்மி தள்ளப்பட்டுள்ளது.