ஆட்சி செய்யாமல் அரசியல் செய்கிறது பா.ஜ., மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
ஆட்சி செய்யாமல் அரசியல் செய்கிறது பா.ஜ., மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 06, 2025 09:19 PM
புதுடில்லி:“ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில், கல்வித்துறை மேம்படுத்தப்பட்டது; ஆனால், பா.ஜ., அரசு வளர்ச்சிப் பணிகள் எதுவும் செய்யாமல், அரசியல் மட்டுமே என செய்து வருகிறது,”என, முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறினார்.
டில்லி அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில், 2000 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், விசாரணைக்காக ஊழல் தடுப்புப் பிரிவில் நேற்று ஆஜரானார்.
அப்போது, நிருபர்களிடம் ஜெயின் கூறியதாவது:
ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில், கல்வித் துறை மேம்படுத்தப்பட்டது. ஆனால், பா.ஜ., அரசு அரசியல் மட்டுமே செய்து வருகிறது. டில்லி மாநகரின் முக்கியப் பிரச்னைகளை இருந்து கவனத்தை திசைதிருப்புவதில்தான் பா.ஜ., அரசு கவனமாக இருக்கிறது.
வகுப்பறைகள் கட்டியதில் எந்த ஊழலும் நடக்கவில்லை. டில்லியில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு மறைமுகமாக உதவி செய்கிறது. இந்த விவகாரத்தை திசை திருப்பவே ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கல்வித் துறையை முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மிகச் சிறப்பாகப் நிர்வகித்தார். பள்ளிக் கட்டடங்கள் மட்டுமின்றி கல்வியிலும் சர்வதேச தரத்துக்கு மாற்றினார். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிநாடுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியவதில், 2000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக, பா.ஜ., தலைவர் கபில் மிஸ்ரா உள்ளிட்ட்டோர், ஊழல் தடுப்புப் பிரிவில், 2019ம் ஆண்டு புகார் செய்தனர். கிடப்பில் கிடந்த இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி, கடந்த ஏப்ரல், 30ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மணீஷ் சிசோடியா நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராகிறார்.