அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு; இடைக்காலத் தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்!
அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு; இடைக்காலத் தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்!
ADDED : செப் 06, 2024 01:24 PM

புதுடில்லி: அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்குகளை விசாரிக்க, சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த 2006 - 11 தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த சாத்துார் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக 44.56 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.
அதேபோல், 2006-2011ல் வருமானத்துக்கு அதிகமாக ரூ.76 லட்சம் சொத்து சேர்த்ததாக தங்கம் தென்னரசு மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, அறிக்கையை, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், வழக்கில் இருந்து இவர்களை விடுவித்து, சிறப்பு நீதிமன்றங்கள் உத்தரவிட்டிருந்தன.
வழக்கு
இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கைகளை விசாரணைக்கு எடுத்தார். சொத்து குவிப்பு வழக்கில், அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்து, ஸ்ரீவில்லிபுத்துார் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, மீண்டும் விசாரணை நடத்தவும், விசாரணையை தினமும் நடத்தி விரைவில் முடிக்கவும் உத்தரவிட்டது.
இடைக்கால தடை
இதனை எதிர்த்து, அமைச்சர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு,கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். அமைச்சர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், எதிர் மனுதாரர்கள் 4 வாரத்தில் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.