மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்; பாஜவுக்கு காங்., எம்பி சசி தரூர் வாழ்த்து
மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்; பாஜவுக்கு காங்., எம்பி சசி தரூர் வாழ்த்து
UPDATED : டிச 13, 2025 03:28 PM
ADDED : டிச 13, 2025 02:30 PM

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பாஜ அடைந்துள்ள வெற்றி வரலாற்று சாதனை என்று அத்தொகுதியின் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கேரள உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் பினராயி விஜயனின் இடதுசாரிகள் ஜனநாயகக் கூட்டணிக்கு பெருத்த அடி விழுந்துள்ளது. பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் கூட்டணியே முன்னிலை வகிக்கிறது. அதேபோல, பாஜ தலைமையிலான என்டிஏ கூட்டணி திருவனந்தபுரம் மேயர் பதவியை கைப்பற்ற உள்ளது.
மக்களின் நோக்கம் தெளிவாக உள்ளதாக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் எம்பி சசி தருர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்; இன்றைய கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளன. மக்களின் நோக்கம் தெளிவாக தெரிகிறது. கேரளாவின் ஜனநாயக உணர்வு வெளிப்பட்டுள்ளது.
பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளிலும் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (UDF) மனமார்ந்த வாழ்த்துக்கள். இது வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாகும். ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு (LDF) மக்கள் தக்கம் பாடம் புகட்டியுள்ளனர். இது 2020 தேர்தலை விட மிகச் சிறப்பான முடிவாகும்.
அதேபோல, திருவனந்தபுரத்தில் பாஜ அடைந்துள்ள வெற்றி வரலாற்று சாதனையாகும். இடதுசாரி கூட்டணியின் 45 ஆண்டுகால முறையற்ற ஆட்சியை எதிர்த்து நான் பிரசாரம் செய்தேன். இறுதியில் ஆட்சி முறையில் மாற்றத்தை விரும்பிய மக்கள், மற்றொரு (பாஜ) கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.
இதுவே ஜனநாயகத்தின் அழகு. காங்கிரஸ் கூட்டணி அடைந்த வெற்றியாக இருந்தாலும், எனது தொகுதியில் பாஜ கூட்டணி பெற்ற வெற்றியாக இருந்தாலும், மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். கேரளாவின் வளர்ச்சிக்காகவும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், நல்லாட்சிக் கொள்கைகளை உறுதிப்படுத்துவதற்காகவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம், இவ்வாறு அவர் கூறினார்.

