சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: குஜராத்தில் வங்கதேசத்தினர் 1000 பேர் கைது
சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: குஜராத்தில் வங்கதேசத்தினர் 1000 பேர் கைது
UPDATED : ஏப் 27, 2025 06:15 AM
ADDED : ஏப் 26, 2025 01:59 PM

ஆமதாபாத்: குஜராத்தில் சட்ட விரோதமாக குடியேறி, போலி
ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வந்த 1,000க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவரை
போலீசார் கைது செய்தனர்.
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல்
தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, நம் அண்டை நாடான வங்கதேசத்தைச்
சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக குடியேறி வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல்
கிடைத்தது.
இதன்படி, ஆமதாபாத், சூரத் நகரங்களில் அதிரடி சோதனை
நடத்திய போலீசார், சட்ட விரோதமாக குடியேறிய, 1,000க்கும் மேற்பட்ட
வங்கதேசத்தவரை கைது செய்தனர்.
இது குறித்து, குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி நேற்று கூறியதாவது:
சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தவரை பிடிப்பதில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்துள்ளது.
ஆமதாபாதில், 890 பேரும்; சூரத்தில் 134 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
செய்யப்பட்டவர்கள் குஜராத்துக்கு வரும் முன், நாட்டின் பல்வேறு பகுதிகளில்
தங்க, மேற்கு வங்கத்தில் இருந்து பெறப்பட்ட போலி ஆவணங்களை பயன்படுத்தி
உள்ளனர்.
இந்த போலி ஆவணங்களை உருவாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். கைது செய்யப்பட்ட நபர்களில் பலர் போதைப்பொருள்
விற்பனையாளர்கள், மனித கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
இருவர்,
அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின், 'ஸ்லீப்பர் செல்'லாக பணியாற்றி
உள்ளனர். கைது செய்யப்பட்ட வங்கதேசத்தவர், விரைவில் நாடு கடத்தப்படுவர்.
அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குஜராத்தில்
வசிக்கும் சட்டவிரோத குடியேறிகள், தாங்களாகவே போலீசாரிடம் சரணடைய வேண்டும்.
இல்லையெனில் அவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவர். அவர்களுக்கு
தங்குமிடம் வழங்கும் நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய
அரசின் உத்தரவுப்படி, பாகிஸ்தானியர்களை குஜராத்தில் இருந்து வெளியேற்றும்
பணி முழுவீச்சில் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.