ADDED : செப் 22, 2024 11:28 PM
பெங்களூரு: 'லோக் ஆயுக்தா பெயரில் யாராவது போன் செய்து மிரட்டி பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம்,' என, லோக் ஆயுக்தா எச்சரித்து உள்ளது.
கர்நாடகாவில் அரசு அதிகாரிகள் ஊழல் செய்தாலோ, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாலோ லோக் ஆயுக்தா விசாரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக அரசு அதிகாரிகளிடம் மொபைல் போனில் பேசும் மர்ம நபர்கள், லோக் ஆயுக்தாவில் இருந்து பேசுகிறோம்.
'உங்கள் மீது ஊழல் புகார் வருகிறது. இது பற்றி விசாரிக்காமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும்.
இல்லாவிட்டால் உங்கள் மீது ஒன்றுக்கு இரண்டாக ஊழல் புகார் செய்வோம்' என மிரட்டி உள்ளனர்.
இது பற்றி லோக் ஆயுக்தா அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து லோக் ஆயுக்தா வெளியிட்ட அறிக்கையில், 'லோக் ஆயுக்தாவில் இருந்து பேசுகிறோம் என கூறி யாராவது பணம் கேட்டு மிரட்டினால் பயப்பட வேண்டாம்.
'நாங்கள் யாரும் அப்படி அழைப்பு விடுப்பது இல்லை. யாராவது அப்படி பேசினால் அது மோசடி. பணம் கொடுக்காதீர்கள். எச்சரிக்கையுடன் இருங்கள்' என கூறப்பட்டுள்ளது.