வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைச்சகம் திறக்க நடவடிக்கை
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைச்சகம் திறக்க நடவடிக்கை
ADDED : பிப் 22, 2024 07:22 AM
பெங்களூரு: “கர்நாடகாவிலும் கேரளாவை போன்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைச்சகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் கமிட்டி துணை தலைவி ஆர்த்தி கிருஷ்ணா தலைமையில், பல்வேறு நாடுகளின் 15க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள், கன்னடர்கள் சட்டசபை நிகழ்வுகளை, சபாநாயகர் கேலரியில் பார்வையிட்டனர்.
சபாநாயகர் காதர் பேசியதாவது:
சட்டசபை நிகழ்வுகளை காண, நமது சிறப்பு விருந்தினர்களாக, பல்வேறு நாடுகளில் இருந்தும் கன்னடர்கள் வந்துள்ளனர். தொழில், பணி உட்பட, பல காரணங்களால் வெளிநாடுகளுக்கு சென்ற கன்னடர்கள், நமது கலாசாரம், பாரம்பரியத்தை மறக்கவில்லை.
அந்தந்த நாடுகளில் சம்பாதிக்கும் வருவாயில் ஒரு பங்களை, நம் சமுதாய வளர்ச்சிக்காக நன்கொடை வழங்குகின்றனர். இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதில், மாநிலம், நாட்டின் வளர்ச்சியில் மறைமுகமாக உதவுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேசியதாவது:
கேரளாவை போன்று, வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைச்சகம் அமைக்கும் விஷயத்தை, தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம். வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று வாழ்க்கை நடத்தும் பலர், தொழிலதிபர்களாக வெற்றி அடைந்துள்ளனர்.
60 சதவீதம் முதல் 80 சதவீதம் வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளி நாடுகளில் சம்பாதித்த வருவாயை, இந்தியாவுக்கு கொண்டு வர ஆர்வம் காண்பிக்கின்றனர். வெளிநாட்டுக்கு சென்றால் மீண்டும் வரமாட்டார்கள் என்ற சூழ்நிலை, இப்போது இல்லை. பொது பொறுப்புத் திட்டத்தின் கீழ், நிதி வழங்குகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.