'வக்பு வாரியம் குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை'
'வக்பு வாரியம் குறித்து தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை'
ADDED : நவ 11, 2024 05:07 AM
குடகு: 'வக்பு வாரியம் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என குடகு போலீசார் எச்சரித்து உள்ளனர்.
குடகு மாவட்டம் குஷால்நகர், முள்ளுசோக கிராமத்தில் புச்சிமண்டா ரேணுகா உத்தப்பா என்ற பெண் வசித்து வருகிறார். இவரது நிலம், வக்பு வாரியத்திற்கு சொந்தமானது.
அதில் அவருக்கு உரிமை இல்லை. நிலத்திலிருந்து வெளியேற வேண்டும் என மிரட்டல் வந்தது என்று முகநுாலில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு பரவியதை அடுத்து, குடகு போலீசார் தாமாக முன்வந்து விசாரித்தனர். விசாரணையின் போது, 'அப்பெண்ணின் நிலம் வக்பு வாரியத்திற்கு சொந்தமானது இல்லை; வக்பு வாரியத்தில் இருந்து யாரும் அவரை மிரட்டவில்லை. அவரது அண்டை வீட்டாரிடம் விசாரித்த போது யாரும் வரவில்லை' என தெரிய வந்தது.
இதை ஏற்றுக்கொள்ளாத அப்பெண், தனக்கு அக்., 29, 30 ஆகிய தேதிகளில் தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தது என்றார். அவரது தொலைபேசி அழைப்புகளை, ஆய்வு செய்ததில், அதுவும் பொய் என்பது தெரிய வந்தது.
'அப்பெண்ணின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. வக்பு வாரியம் பற்றி தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என குடகு போலீசார் எச்சரித்துஉள்ளனர்.