கலவரம் பாதித்த மணிப்பூருக்கு கூடுதல் படையினர் வருகை
கலவரம் பாதித்த மணிப்பூருக்கு கூடுதல் படையினர் வருகை
ADDED : நவ 22, 2024 02:06 AM

இம்பால் : இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு, மேலும் எட்டு பிரிவு மத்திய ஆயுதப்படை போலீசார் வருகை தந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, மெய்டி - கூகி சமூகத்தினரிடையே இட ஒதுக்கீடு தொடர்பாக ஓராண்டுக்கும் மேலாக மோதல் நடக்கிறது.
இதற்கிடையே, ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், கூகி இனத்தவருக்கும் இடையே கடந்த 11ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில், 10 பேர் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து முகாமில் தங்கியிருந்த மெய்டி இனத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள், மூன்று குழந்தைகள் என, ஆறு பேர் மாயமான நிலையில், சில நாட்களுக்கு பின், அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டன.
இதை தொடர்ந்து மூன்று அமைச்சர்கள், ஆறு எம்.எல்.ஏ.,க்களின் வீடுகள் மற்றும் முதல்வர் பைரேன் சிங்கின் வீட்டிலும் மெய்டி இனத்தவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தொடர் வன்முறை சம்பவங்களை அடுத்து, 50 பிரிவு மத்திய ஆயுதப்படை பிரிவினர் மணிப்பூரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 19ம் தேதி, 11 பிரிவைச் சேர்ந்த மத்திய ஆயுதப்படை போலீசார் மணிப்பூர் வந்தடைந்தனர்.
நேற்று, மேலும் எட்டு பிரிவு படையினர் தலைநகர் இம்பால் வந்துள்ளனர். இவர்கள், வன்முறை அதிகம் நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கூகி சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் விடுத்துள்ள அறிக்கையில், 'மணிப்பூர் முழுதும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
'கிளர்ச்சியாளர்கள் கொள்ளையடித்து வைத்துள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.