“ சிறந்த பொருளாதார நிபுணர் ஆட்சியிலே சாதாரண மனிதன் அதிர்ச்சி ” - அத்வானி விமர்சனம்
“ சிறந்த பொருளாதார நிபுணர் ஆட்சியிலே சாதாரண மனிதன் அதிர்ச்சி ” - அத்வானி விமர்சனம்
UPDATED : ஆக 22, 2011 04:54 PM
ADDED : ஆக 22, 2011 09:44 AM

புதுடில்லி: பிரதமர் மன்மோகன்சிங் சிறந்த பொருளாதார நிபுணராக இருந்தாலும் இவரது ஆட்சியில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு ஆகியவற்றால் சாதாரண மனிதர்கள் அதிர்ந்து போய் இருக்கின்றனர். இத்துடன் இந்த அரசு, ஊழல் மலிந்த அரசாக மாறிப்போனது எனவே பிரதமர் ஆளும் தகுதியை இழந்து விட்டார். இவர் தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என அத்வானி ஆவேசமாக பேசினார்.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பிரதமர் மன்மோகன்சிங்கினால் சாதாரண மக்களின் பிரச்னையை புரிந்து கொள்ள முடியாது. காரணம் அவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை. பிரதமர் சிறந்த பொருளாதார நிபுணர் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இவரது ஆட்சியில் இங்கு வாழும் சாதாரண அடிமட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். காரணம் இந்த அரசு அதிகாரத்திற்கு வந்த நாள் முதல் நாட்டில் விலைவாசி மேலே, மேலே போய்க் கொண்டேயிருக்கிறது.
இந்த ஆட்சியின் காலத்தில் பல்வேறு ஊழல்கள் வெளிச்சத்திற்கு தொடராக வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவும், பிரதமரும்தான் பொறுப்பாவர். ஸ்பெக்ட்ரம் ராஜா, காமன்வெல்த் கல்மாடி மற்றும் கனிமொழி ஆகியோர் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் பொதுக்கணக்கு குழுவின் அறிக்கையும், நீதி மன்ற நடவடிக்கையும்தான் காரணம். ஊழலுக்கு எதிரானவர்களை நாங்கள் (மத்திய அரசு) ஜெயிலுக்கு அனுப்பி வருகிறோம் என்று சொல்வது சுத்தப்பொய்.
ஊழல், விலைவாசி, பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளால் பிரதமர் பதவியில் நீடிக்க தார்மீக உரிமையை இழந்து விட்டார். இவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும் இவ்வாறு அத்வானி பேசினார்.