கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவும் அடாவடி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தீவிரம்
கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவும் அடாவடி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தீவிரம்
ADDED : பிப் 26, 2024 03:48 PM

அமராவதி: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட ஆந்திர அரசும் முடிவெடுத்துள்ளது. இதற்காக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டினார்.
ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று (பிப்.,26) அடிக்கல் நாட்டினார். பாலாற்றில் தடுப்பணை உள்பட 3 திட்டங்களுக்கு ரூ.315 கோடி நிதி ஒதுக்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே ஏற்கனவே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளதால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாயும் பாலாறு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.
இந்த நிலையில், மேலும் ஒரு தடுப்பணையை கட்டுவதற்கான பணிகளை ஆந்திர அரசு துவக்கி இருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட தீவிரம் காட்டி வரும் நிலையில், தற்போது ஆந்திர அரசும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆயத்தமாகி வருவது தமிழக அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

