பாகிஸ்தான் போட்ட ஒப்பந்தம் செல்லாது: சீனாவுக்கு இந்திய ராணுவ தளபதி பதிலடி
பாகிஸ்தான் போட்ட ஒப்பந்தம் செல்லாது: சீனாவுக்கு இந்திய ராணுவ தளபதி பதிலடி
ADDED : ஜன 13, 2026 06:17 PM

புதுடில்லி: காஷ்மீரின் ஷக்சகம் பள்ளத்தாக்கு பகுதி தொடர்பாக பாகிஸ்தான் - சீனா இடையிலான ஒப்பந்தம் செல்லாது. அது சட்டவிரோதமானது என ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியுள்ளார்.
இந்தியாவின் சியாச்சின் பனிமலைப் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ளது ஷக்சகம் பள்ளத்தாக்கு. இது இமயமலையின் காரகோரம் மலைத்தொடரில் அமைந்துள்ளது. காஷ்மீரை ஆக்கிரமித்த பாகிஸ்தான், கடந்த 1963 மார்ச் 2ம் தேதி எல்லை தொடர்பாக சீனா உடன் ஒப்பந்தம் ஒன்றை போட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்த ஷக்சகம் பகுதியை சீனாவிடம் வழங்கியது. அதற்கு அப்போது முதல் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
எதிர்ப்பு
இந்நிலையில் இந்த பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தி வருகிறது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் சமீபத்தில் கூறுகையில், ஷக்சகம் பள்ளத்தாக்கு சீனாவுக்கு சொந்தமானது. எங்களது சொந்த நிலத்தில்உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எங்களுக்கு முழு உரிமை உள்ளது. 1960 ல் பாகிஸ்தான் சீனா இடையிலான ஒப்பந்தம் இரண்டு இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையே போடப்பட்டதால் அது சட்டப்பூர்வமானது எனத் தெரிவித்து இருந்தார்.
அங்கீகாரம் இல்லை
மத்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், ஷக்சகம் பள்ளத்தாக்கு பகுதி இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. 1963 ம் ஆண்டு சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான எல்லை ஒப்பந்தம் சட்ட விரோதமானது மற்றும் செல்லாது. இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் உரிமை எங்களுக்கு உள்ளது.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்லும் சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை இந்தியா ஒரு போதும் அங்கீகரிக்காது, எனத் தெரிவித்துள்ளது.
ஏற்க மாட்டோம்
ராணுவ தளபதி உபேந்திர திவேதி கூறியதாவது: 1963 ல் ஷக்சகம் பகுதியை வழங்கும் வகையில் சீனா உடன் பாகிஸ்தான் போட்ட ஒப்பந்தம் சட்ட விரோதமானது. அது செல்லாது. ஷக்சகம் பகுதியில் எந்த நடவடிக்கையையும் ஏற்க முடியாது. பாகிஸ்தான் - சீனா இடையிலான பொருளாதார வழித்தட திட்டம் கவலைக்குரியது. அதனை ஏற்க முடியாது. சட்டவிரோதமாக இரு நாடுகளும் மேற்கொள்ளும் பணி என்றே கருத முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

