தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சிறிய அணு உலைகள் கூட்டாக தயாரிக்க ஒப்பந்தம்

சிறிய அணு உலைகள் கூட்டாக தயாரிக்க ஒப்பந்தம்

சிறிய அணு உலைகள் கூட்டாக தயாரிக்க ஒப்பந்தம்


ADDED : பிப் 13, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2025 01:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாரிஸ்: அணுமின் உற்பத்திக்கான சிறிய அணு உலைகளை கூட்டாக தயாரிப்பது உள்ளிட்டவை தொடர்பாக, பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தில், அந்த நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரோனுடனான சந்திப்பில் இது இறுதி செய்யப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக, ஐரோப்பிய நாடான பிரான்சுக்கு சென்றுள்ளார். ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாட்டை, பிரான்சுடன் இணைந்து இந்தியா நடத்தியது. இதில் இரு தலைவர்களும் பங்கேற்றனர். அடுத்தாண்டு இந்த உச்சி மாநாட்டை இந்தியா நடத்த உள்ளது.

உயர்நிலை குழு கூட்டம்


இதைத் தொடர்ந்து, பிரான்சில் உள்ள மார்ஷலேவுக்கு, பிரான்ஸ் அதிபரின் விமானத்தில், மேக்ரோனுடன், பிரதமர் மோடி பயணம் செய்தார். அங்கு இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். இரு நாட்டு அதிகாரிகள் அளவிலான உயர்நிலை குழு கூட்டமும் நடந்தது.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், பிரதமர் நரேந்திர மோடி இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

இந்த சந்திப்பின்போது, அணு மின் உற்பத்தி தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கார்பன் வெளியேற்றத்தைத் தடுப்பதற்கான பொருளாதார மாற்றங்கள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதில், அணுசக்தியே முக்கியமானதாக கொண்டு வரப்பட வேண்டும் என இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.

இந்த வகையில், சிறிய அணு உலைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட அணு உலைகள் தயாரிப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த வகை அணு உலைகள், வழக்கமான அணு உலைகளைவிட அளவில் சிறிதாக இருக்கும். ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு, எந்த இடத்திலும் இவற்றை நிறுவ முடியும்.

தொடர்ந்து ஆதரவு


இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, இரு நாடுகளிடையே சிவில் அணுசக்தி தொடர்பான அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு தொழில்சார் நடைமுறைகள் குறித்த பயிற்சி அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பயன்களுக்கு பயன்படுத்தும் முயற்சிகள் மற்றும் இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதென இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். குறிப்பாக, மஹாராஷ்டிராவின் ஜெயிதாப்பூரில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

சிவில் அணு சக்திக்கான இரு தரப்பு சிறப்புப் பணிக்குழு முதலாவது கூட்டத்தை இருவரும் வரவேற்றனர்.

சர்வதேச அணுசக்தி கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுவது தொடர்பாக, இந்தியாவின் அணுசக்தித் துறை மற்றும் பிரான்சின் அணுசக்தி முகமைக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தமும் புதுப்பிக்கப்பட்டது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள இரு தலைவர்களும் வலியுறுத்தினர். பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடமளிக்க பிரான்ஸ் தன் ஆதரவை மீண்டும் தெரிவித்துள்ளது.

தொழில், வர்த்தகம், முதலீடு என, பல துறைகளில் தொடர்ந்து இரு தரப்பும் கைகோர்த்து செயல்படுவது தொடர்பாக, இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தொடர்ந்து இணைந்து செயல்படுவது என, இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

துணை துாதரகம்


முன்னதாக, மார்ஷலே நகரின் மஜார்கசில் அமைந்துள்ள, இரண்டாம் உலகப் போரின்போது உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

மேக்ரோனும் உடன் சென்றார். மார்ஷலேயில் அமைக்கப்பட்டுள்ள இந்திய துணைத் துாதரகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

தன் பயணத்தை முடித்து அமெரிக்காவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடியை, விமான நிலையம் வரை சென்று, மேக்ரோன் வழியனுப்பி வைத்தார்.

முக்கிய முடிவுகள்

பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் இடையேயான சந்திப்பின்போது எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள்: ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளில், அனைவருக்கும் பலனளிக்கும் வகையில், பொறுப்புடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது வரும், 2026ம் ஆண்டு, இந்தியா - பிரான்ஸ் இடையேயான புதுமை கண்டுபிடிப்பு ஆண்டாக கொண்டாடப்பட உள்ளது. இது தொடர்பான இலச்சினை வெளியிடப்பட்டது டிஜிட்டல் அறிவியலுக்கான தனி கூட்டு மையம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது இந்தியாவைச் சேர்ந்த, 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு, பிரான்சின் ஸ்டார்ட்அப் பயிற்சி மையமான, 'ஸ்டேஷன் எப்' பயிற்சி அளிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us