இந்தியாவில் தொடர்கதையாகும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அவதிக்குள்ளாகும் பயணிகள்
இந்தியாவில் தொடர்கதையாகும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அவதிக்குள்ளாகும் பயணிகள்
UPDATED : அக் 20, 2024 09:20 PM
ADDED : அக் 20, 2024 04:55 PM

புதுடில்லி: கடந்த சில நாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இன்றும் 20க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் இருந்து கிளம்பும் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. அதிலும், விமானங்கள் கிளம்பிய பிறகு பல மிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. இந்த பிரச்னை மத்திய அரசு, விமான நிறுவனங்கள், பயணிகளுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்றும் 20க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விஸ்தாரா, ஆகாசா ஏர் விமானங்களுக்கு மிரட்டல் வந்தது. இதனை அந்த விமான நிறுவனங்கள் உறுதி செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஆகாசா ஏர் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மிரட்டல் தொடர்பாக எங்களது அதிகாரிகள்,பாதுகாப்பு நிபுணர்களுடன் தொடர்பில் உள்ளனர். உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்து உள்ளது.
விஸ்தாரா
* டில்லி - ஜெர்மனியின் பிராங்க்பர்ட்
*சிங்கப்பூர் - மும்பை
*இந்தோனேஷியாவின் பாலி- டில்லி
*சிங்கப்பூர் - டில்லி
*சிங்கப்பூர் - புனே
*மும்பை -சிங்கப்பூர் ஆகிய மார்க்கங்களில் பறக்கும் விஸ்தாரா நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது.
இண்டிகோ விமானங்கள்
* சவுதியின் ஜெட்டா- மும்பை
*கோழிக்கோடு - சவுதியின் தம்மம்
*டில்லி - துருக்கி தலைநகர் இஸ்தான்புல்
*புனே - ஜோத்பூர்
* கோவா- ஆமதாபாத் இடையில் இயக்கப்படும் இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
விமான நிலையத்திற்கு மிரட்டல்
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள சாம்ப்ரா விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. விமான நிலைய இயக்குநரின் இமெயில் முகவரிக்கு சென்னையில் இருந்து மிரட்டல் செய்தி வந்தது. இதனையடுத்து, வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.
80 கோடி இழப்பு?
நேற்று ஒரே நாளில் 32 விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தை தரையிறக்குவது, எரிபொருள் செலவு, பயணிகளுக்கு இழப்பீடு உள்ளிட்ட காரணங்களால் ஒவ்வொரு முறையும் விமான நிறுவனங்களுக்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் தொடர்கதையான வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களினால், விமான நிறுவனங்களுக்கு ரூ.80 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.