காஷ்மீரில் விமானப்படை வீரர் வீரமரணம்: பயங்கரவாதிகளை வலைவீசி தேடும் ராணுவம்
காஷ்மீரில் விமானப்படை வீரர் வீரமரணம்: பயங்கரவாதிகளை வலைவீசி தேடும் ராணுவம்
ADDED : மே 05, 2024 11:06 AM

ஜம்மு: காஷ்மீரின் பூஞ்ச்சில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் விமானப்படை வீரர்கள் சென்ற கான்வாய் மீது நேற்று( மே 04) மாலை பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். மற்றவர்களின் உடல்நிலை சீராக உள்ளது.
இந்நிலையில், தாக்குதல் நடத்தி விட்டு தலைமறைவான பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். பூஞ்ச்சில் தாக்குதல் நடந்த இடத்தை ராணுவ வீரர்களும், போலீசாரும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அப்பகுதியில் வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்வதுடன், பயங்கரவாதிகளை சல்லடை போட்டு தேடி வருகின்றனர். கடந்த ஆண்டு டிச.,மாதத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களே, தற்போதும் தாக்குதல் நடத்தியிருக்க முடியும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில காங்கிரஸ், வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து உள்ளது.