ADDED : ஜன 16, 2025 06:26 AM
பெங்களூரு: காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் பெயரில் மோசடி செய்த ஐஸ்வர்யா கவுடா, டாக்டர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மாண்டியா, மலவள்ளி கிருகாவலு கிராமத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா கவுடா, 34.
இவர், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தங்கை என்று கூறி, ஒரு நகைக்கடையில் 8 கோடி ரூபாய்க்கு நகை வாங்கி மோசடி செய்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது ஜாமினில் உள்ளார்.
ஆனாலும் அவர் மீது தினமும் ஒரு மோசடி புகார் கொடுக்கப்படுகிறது. போலீசார் நடத்தும் விசாரணையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வெளி வருகிறது.
இந்நிலையில், ஐஸ்வர்யா பற்றி மேலும்ஒரு தகவல், போலீஸ் விசாரணையில் தெரிந்துள்ளது.
அதாவது வசதி படைத்த டாக்டர்களை குறிவைத்து ஐஸ்வர்யா மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
டாக்டர்களிடம் பேசும் போது, 'உங்களிடம் இருக்கும் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றிக் கொடுக்கிறேன். எனக்கு குறைந்த கமிஷன் கொடுத்தால் போதும்' என்று கூறி நம்ப வைத்துள்ளார்.
பல்வேறு காரணங்களை சொல்லி, பல டாக்டர்களிடம் இருந்து பணத்தை வாங்கி மோசடி செய்துள்ளார். மோசடி செய்யும் நோக்கில் நவ்யஸ்ரீ என்ற தனது உண்மையான பெயரை, ஐஸ்வர்யா என்று மாற்றி கொண்டதும் தெரிய வந்துள்ளது.