ADDED : மார் 17, 2024 02:33 AM

லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இனி தேர்தல் பிரசாரம் வேகமெடுக்கும். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தலைவர்கள் அனைவருமே மீண்டும் பா.ஜ., ஆட்சி தான் என்பதில் உறுதியாக உள்ளனர்.
மூன்றாம் முறையாக பிரதமர் ஆனதும், தன் அலுவலகத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்யவுள்ளாராம் மோடி. முக்கிய பதவிகளில் இப்போது உள்ளவர்களை மாற்றப் போகிறாராம்.
பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் செயலர் என, பல ஐ.ஏ.எஸ்.,- ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இவர்கள் மிகவும் சீனியர்கள். இவர்களை அதிரடியாக மாற்றி, முற்றிலும் இளைஞர்களை நியமிக்கப் போகிறாராம்.
இன்னொரு விஷயமும் டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்படுகிறது. மோடியின் வலது கரமாக செயல்படுபவர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்.
'புதிய ஆட்சியில் இவருக்கு பதிலாக வேறு ஒருவர் நியமிக்கப்படலாம்' எனவும் கூறப்படுகிறது. இதைத் தவிர, புதிய அமைச்சர்கள் பட்டியலும் தயாராகி விட்டது என்கின்றனர். இப்போது பதவியில் உள்ள சிலருக்கு அமைச்சர் பதவி கிடைக்காதாம்.

