ADDED : ஆக 23, 2026 08:52 PM
புதுடில்லி: நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அரசு முறை பயணமாக நம் அண்டை நாடான சீனாவுக்கு இன்று செல்கிறார்.
சீனாவுக்கும், நம் நாட்டுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை இருக்கிறது. 2020ல், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில், இரு ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலுக்கு பின், இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் கடந்த ஆண்டு சந்தித்து பேசியதை அடுத்து, இரு தரப்பு உறவு புத்துயிர் பெற்றது.
இந்நிலையில், எல்லை விவகாரங்கள் மற்றும் இரு தரப்பு உறவுகள் குறித்த, 25வது சிறப்பு பிரதிநிதிகள் கூட்டம் நாளை பீஜிங்கில் நடக்கிறது. இதில் பங்கேற்க நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று சீனா செல்கிறார். சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்து அவர் பேச்சு நடத்துகிறார். எல்லை விவகாரங்களில் பரஸ்பரம் ஏற்கக்கூடிய தீர்வை எட்டுவது குறித்தும், எல்லை மேலாண்மை குறித்தும் விவாதிக்கப்படும் என, கூறப்படுகிறது.
