ரஷ்யா- உக்ரைன் போர்; விரைவில் நல்ல செய்திக்கு வாய்ப்பு; ஜெய்சங்கர் சொல்வது இதுதான்!
ரஷ்யா- உக்ரைன் போர்; விரைவில் நல்ல செய்திக்கு வாய்ப்பு; ஜெய்சங்கர் சொல்வது இதுதான்!
UPDATED : செப் 12, 2024 12:57 PM
ADDED : செப் 12, 2024 12:46 PM

புதுடில்லி: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நிறுத்த விவகாரத்தில் இந்தியா முக்கிய பங்காற்றி வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உறுதி
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளது. ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், இது வரை உருப்படியான தீர்வு ஏற்படவில்லை.இருதரப்பும் பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தபோது, பிரதமர் மோடி வலியுறுத்தினார். அமைதி பேச்சுக்கு தேவையான உதவியை செய்யத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் உறுதியளித்திருந்தார்.
ரஷ்ய பயணம்
அமைதிப் பேச்சுக்கு இந்தியா மத்தியஸ்தம் செய்தால், அதற்கு தயாராக இருப்பதாக புடின் கூறியிருந்தார். இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ரஷ்யா சென்றுள்ளார். அமைதி பேச்சு தொடர்பாக, ரஷ்யாவுடன் அவர் பேசுவார் என்று தெரிகிறது. பிரிக்ஸ் கூட்டத்தில் பேசுகையில், பயங்கரவாதம், சைபர் குற்றங்களை தடுப்பதில் இணைந்து செயல்படுவது தொடர்பாக, அஜித் தோவல் விளக்கினார். தொடர்ந்து, 'பிரிக்ஸ்' அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயை சந்தித்து சிறிது நேரம் பேசினார்.
திட்டம்
இந்த நிலையில், போர் நிறுத்த திட்டத்தோடு, அஜித் தோவல் ரஷ்யா சென்றிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஜெர்மன் வெளியுறவுத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர இருநாடுகளும் முன்வருவார்கள் என்று இந்தியா நம்புகிறது. இதன் ஒரு பகுதியாகவே, பிரதமர் மோடி முன்மொழிந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கான திட்டத்துடன், தேசிய பாதுகாப்பு செயலாளர் அஜித் தோவல், ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். உலகளவில் இந்தியாவின் செயல்பாடுகள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நிச்சயம், இருநாடுகளிடையே அமைதியான சூழல் நிலவ இந்தியா முயற்சிக்கும், எனக் கூறினார்.