ADDED : டிச 07, 2024 05:53 AM

பாலக்காடு; நாட்டின் 5வது சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, ஆலத்தூர் ஸ்டேஷனை மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு, ஆலத்தூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் உன்னிகிருஷ்ணன் கூறியதாவது:
மத்திய உள்துறை அமைச்சகத்தின் மதிப்பாய்வு இறுதி கட்டத்தில், 76 போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்து ஆலத்தூர் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பில் உள்ள குற்ற விசாரணை, சட்ட அமலாக்கம், அடிப்படை வசதிகள், அணுகுமுறை, லாக்கப் மற்றும் பதிவு அறை உள்ளிட்ட வசதிகள் என, நெறிமுறைகளை அடிப்படையாக கொண்டு மத்திய உள்துறை அமைச்சகம் சிறந்த போலீஸ் ஸ்டேஷனை தேர்ந்தெடுத்து உள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மீது எடுத்த நடவடிக்கை, வழக்கு விசாரணையின் வளர்ச்சி, புகார் தீர்வு, புகார்தாரர்களிடம் உள்ள அணுகுமுறை, குற்ற செயல்கள் தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவையில் உள்ள சிறப்பு மற்றும் பிற பொது நலச் செயல்பாடுகள் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
முந்தைய ஆண்டுகளில், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள குற்றிப்புரம், கண்ணூர் நகரில் உள்ள வளபட்டிணம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்கள், நாட்டின் சிறந்த 10 போலீஸ் ஸ்டேஷன்களில் பட்டியலில் இடம் பிடித்திருந்தது.
இந்த பட்டியலில், நடப்பாண்டு ஆலத்துார் போலீஸ் ஸ்டேஷன் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உன்னிகிருஷ்ணன்