கெஜ்ரிவால் ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து ராஞ்சியில் ‛இண்டியா' கூட்டணி கூட்டம்: ராகுல் பங்கேற்கவில்லை
கெஜ்ரிவால் ஹேமந்த் சோரன் கைதை கண்டித்து ராஞ்சியில் ‛இண்டியா' கூட்டணி கூட்டம்: ராகுல் பங்கேற்கவில்லை
UPDATED : ஏப் 21, 2024 05:02 PM
ADDED : ஏப் 21, 2024 03:08 PM

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ‛ இண்டியா ' கூட்டணி கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்கவில்லை.
ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனையடுத்து அவர் பதவி விலகினார். அதேபோல், டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கைதாகி டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதனைக் கண்டித்து ஜார்க்கண்டில் ‛இண்டியா' கூட்டணி சார்பில் ராஞ்சியில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கெஜ்ரிவால் மனைவி சுனிதா, ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா, காங்கிரஸ் தலைவர் கார்கே, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத், தேசிய மாநாட்டு கட்சியின் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அவர்கள் ராஞ்சி வந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி., ராகுல் இப்பேரணியில் பங்கேற்க மாட்டார் என அக்கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக டில்லியை விட்டு அவரால் செல்ல முடியாது எனக்கூறினார். இதனால் காங்., சார்பில் மல்லிகார்ஜூன கார்கே மட்டும் பங்கேற்கிறார்.
இந்தக் கூட்டத்தில் கெஜ்ரிவால் மனைவி சுனிதா பேசியதாவது: அதிகாரத்திற்கு வர வேண்டும் என கெஜ்ரிவாலுக்கு ஆசை கிடையாது. நாட்டிற்கு சேவை செய்யவே அவர் விரும்பினார். இந்தியாவை நம்பர் 1 நாடாக மாற்ற முயற்சித்தார். அவரது உணவு முன்பு கேமரா உள்ளது. சிறையில் அவருக்கு இன்சுலீன் வழங்க மறுக்கின்றனர். அங்கேயே அவரை கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். கெஜ்ரிவால் தைரியமானவர். சிறையிலும் நாட்டைப் பற்றியே சிந்திக்கிறார். இவ்வாறு சுனிதா பேசினார்.
ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: அரசியல்சாசனத்தை முடித்து விடுவோம் என பா.ஜ.,வினர் திரும்பத் திரும்ப பேசி வருகின்றனர். அதனை எழுதியவர் அம்பேத்கர். யாராலும் அழிக்கும் தைரியம் யாருக்கும் கிடையாது. நாட்டின் மக்கள் உங்களுக்கு முடிவு கட்டுவார்கள்.

