அனைத்து தலைவர்களும் விழிப்புடன் இருங்கள்! இந்திராவை விமர்சித்து சசி தரூர் கட்டுரை
அனைத்து தலைவர்களும் விழிப்புடன் இருங்கள்! இந்திராவை விமர்சித்து சசி தரூர் கட்டுரை
ADDED : ஜூலை 11, 2025 12:14 AM

கொச்சி: “நாட்டின் வரலாற்றில், எமர்ஜென்சி ஒரு இருண்ட காலம். அப்போது அரங்கேறிய அட்டூழியங்களுக்கு பதிலடியாகவே, இந்திராவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்கள் துாக்கி அடித்தனர்,” என, காங்., - எம்.பி., சசி தரூர் தெரிவித்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்., செயற்குழு உறுப்பினரும், கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.,யுமான சசி தரூர், சமீபகாலமாக, கட்சிக்கு எதிராகவும், பா.ஜ., மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்.
காங்கிரசைச் சேர்ந்த மறைந்த பிரதமர் இந்திரா, 1975 ஜூன் 25 - 1977 மார்ச் 21 வரை அமல்படுத்திய எமர்ஜென்சி குறித்து, மலையாள தினசரி நாளிதழான, 'தீபிகா'வில் சசி தரூர் எழுதியுள்ள கட்டுரை பேசுபொருளாகி உள்ளது.
அதன் விபரம்:
இந்திய வரலாற்றில் எமர்ஜென்சி ஒரு இருண்ட காலம். அப்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. இந்திராவின் மகன் சஞ்சய், கட்டாய கருத்தடை பிரசாரங்களை வழிநடத்தினார்.
டில்லி போன்ற நகரங்களில், குடிசைகள் இரக்கமின்றி இடிக்கப்பட்டன; ஆயிரக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாகினர். அவர்களின் நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை.
எமர்ஜென்சியால் சட்டம் - ஒழுங்கு சீரானது; ஜனநாயக அரசியல் காப்பாற்றப்பட்டது என, சிலர் வாதிடலாம். ஆனால், இந்த விதிமீறல்கள் அனைத்தும் சர்வாதிகாரத்தையே காட்டுகின்றன.
எமர்ஜென்சி காலத்தில் எழுத, பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது; அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன; அரசியலமைப்பு சட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன. இவை அனைத்தும், இந்திய அரசியலில் ஒரு நீடித்த வடுவை ஏற்படுத்தின.
எமர்ஜென்சிக்கு பின், 1977 மார்ச்சில் நடந்த லோக்சபா தேர்தலில், நாட்டு மக்கள் வெகுண்டெழுந்து, இந்திராவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து துாக்கியடிக்க, காங்கிரசை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர்.
ஜனநாயகம் என்பது இலகுவாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல. அது, தொடர்ந்து வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு விலைமதிப்பற்ற மரபு. என்னை பொறுத்தவரை, இன்றைய இந்தியா, 1975ல் இருந்த இந்தியா அல்ல.
ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து தலைவர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும். எமர்ஜென்சி கற்றுக்கொடுத்த பாடங்களை புரிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு சசி தரூர் எழுதி உள்ளார்.