ஞானவாபி விவகாரம்: வாரணாசி கோர்ட் உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு
ஞானவாபி விவகாரம்: வாரணாசி கோர்ட் உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு
ADDED : பிப் 02, 2024 03:29 PM

அலகாபாத்: வாரணாசியில் ஞானவாபி வளாகத்தின் பாதாள அறையில் ஹிந்து பூஜாரியின் குடும்பத்தார் வழிபாடு செய்ய மாவட்ட நீதிமன்றம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி ஞானவாபி வளாகம் அமைந்துள்ளது. ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது இந்த வளாகம் கட்டப்பட்டதால், அதை ஹிந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டு, ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், கோவில் மீது மசூதி கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞானவாபி வளாகத்தின் தரை தளத்துக்கு அடியே நான்கு பாதாள அறைகள் உள்ளன. இவற்றில், ஒரு அறையில் காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜாரியாக இருந்த சோம்நாத் வியாஸ், 1993 வரை பூஜைகள் செய்து வந்தார். கடந்த 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின், இந்த அறையை மூட, அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர் முலாயம் சிங் உத்தரவிட்டார்.
சோம்நாத் வியாசின் பேரனான சைலேந்திர குமார் பதக், அந்த அறையில் தொடர்ந்து பூஜைகள் செய்வதற்கு அனுமதி கேட்டு, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அந்த இடத்தில், பூஜாரி சோம்நாத் வியாசின் குடும்பத்தினர் பூஜைகள் செய்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, பல தசாப்தங்களுக்கு பிறகு, ஹிந்துக்கள் முதல்முறையாக இன்று பாதாள அறையில் வழிபாடு நடத்தினர்.
வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து முஸ்லிம்கள் தரப்பினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், வாரணாசி நீதிமன்ற உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், வாரணாசி நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளை எதிர்த்து முஸ்லிம் தரப்பினர் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கிய நீதிமன்றம், விசாரணையை பிப்.,6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

