வேட்பாளர் பட்டியல் அறிவித்தது ஆம் ஆத்மி: கூட்டணி பேச்சு 'அம்போ'
வேட்பாளர் பட்டியல் அறிவித்தது ஆம் ஆத்மி: கூட்டணி பேச்சு 'அம்போ'
UPDATED : செப் 09, 2024 03:47 PM
ADDED : செப் 09, 2024 02:55 PM

சண்டிகர்; ஹரியானா சட்டசபை தேர்தலில், 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் கூட்டணி பேச்சு முறிந்துள்ளது.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் ஓட்டுப்பதிவு அக்டோபர் மாதம் 5ம் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்க அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இருக்கின்றன. ஆனால் தனித்து நிற்காமல் காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
பேச்சுவார்த்தை
கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரு கட்சிகளிடையே தொடர்ந்து நீடித்து வருகிறது.ஆனால் கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. தொகுதி பங்கீடு விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
90 தொகுதிகள்
இந்நிலையில் இன்று மாலைக்குள் கூட்டணியை உறுதி செய்யாவிட்டால் 90 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று ஹரியானா ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குப்தா மிரட்டல் விடுத்துள்ளார்.
தகவல் இல்லை
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது; ஹரியானா ஆம் ஆத்மி தலைவர் என்ற முறையில் 90 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்து வருகிறேன். ஆனால் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைமையில் இருந்து கூட்டணி குறித்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை.
பட்டியல்
இன்று மாலைக்குள் கூட்டணி அறிவிப்பை வெளியிட வேண்டும். அப்படி எந்த தகவலும் வரவில்லை என்றால் ஒட்டு மொத்த 90 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு விடுவோம் என்று அவர் கூறி உள்ளார்.
முறிவு
இந்நிலையில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்ததாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலைப்பாடு
வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. ஆனால் ஹரியானா தேர்தல் தொடர்பான கூட்டணி ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே இன்னமும் உறுதியாகவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடிக்கும் நிலையில் காங்கிரசின் நிலைப்பாடு என்பது பற்றிய சஸ்பென்சும் இழுபறியாகவே இருக்கிறது.