பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
ADDED : ஏப் 26, 2025 07:54 AM

புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் புனித பயணம் செல்வார்கள். அங்கு இயற்கையாக உருவாகும் பனிலிங்கம் சிவபெருமானின் வடிவமாக வணங்கப்படுவதே அதற்கு காரணம். யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இம்முறை அமர்நாத் யாத்திரை நடக்குமா என்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகின. இந் நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது; பயங்கரவாத தாக்குதல் இருந்த போதிலும் ஜம்மு காஷ்மீரில் விரைவில் சுற்றுலா தொடங்கும். அந்த நம்பிக்கையை மக்கள் கொண்டு உள்ளனர்.
காஷ்மீரை அதன் வளர்ச்சி பாதையில் இருந்து யாராலும் ஒருபோதும் தடுக்கவே முடியாது. அமர்நாத் யாத்திரை இம்முறை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

