ஆம்புலன்ஸ் தர மறுப்பு; தாய் உடலை வீட்டிற்கு ஸ்ட்ரெச்சரில் இழுத்து சென்ற மகன்
ஆம்புலன்ஸ் தர மறுப்பு; தாய் உடலை வீட்டிற்கு ஸ்ட்ரெச்சரில் இழுத்து சென்ற மகன்
ADDED : டிச 09, 2025 06:59 AM

பாட்னா: மருத்துவமனையில் இறந்த தாயின் உடலை, வீட்டிற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்காததால், ஸ்ட்ரெச்சரிலேயே பல கிலோமீட்டர் தூரம் மகன் இழுத்துச் சென்ற சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது. இது குறித்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
பீகாரின் சசாரம் மாவட்டத்தில் வசிக்கும் சஞ்சய் குமார் என்பவரின் தாய், உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது தாய் உயிரிழந்தார். சஞ்சய் தன் தாயின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி கேட்டார். ஆனால் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளதாக தெரிகிறது.
இதனால் மருத்துவமனை ஸ்ட்ரெச்சரில் தன் தாயின் உடலை வைத்து, தன் வீட்டிற்கு இரவில் பல கிலோமீட்டர் இழுத்துக் கொண்டு சஞ்சய் சென்றுள்ளார். இதனை பொதுமக்களில் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனையடுத்து சசாரம் மாவட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களுக்கு அடிப்படை தேவையான ஆம்புலன்ஸ் வசதி கூட மறுக்கப்பட்டது குறித்து அரசு விசாரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

