உண்ணாவிரத போராட்டத்தில் சொகுசு வாகனம்; பிரசாந்த் கிஷோர் சொல்வது இதுதான்!
உண்ணாவிரத போராட்டத்தில் சொகுசு வாகனம்; பிரசாந்த் கிஷோர் சொல்வது இதுதான்!
ADDED : ஜன 04, 2025 10:10 PM

பாட்னா: உண்ணாவிரத போராட்டத்திற்கு சொகுசு வாகனம் கொண்டு வந்ததற்கு என்ன காரணம் குறித்து பிரசாந்த் கிஷோர் விளக்கம் அளித்து உள்ளார்.
பீஹார் தேர்வாணைய பணியாளர் வாரியம் கடந்த டிச., மாதம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து இந்தத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில், அவர் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் சொகுசு வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் கழிவறை, ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதனை வைத்து அவரை பலரும் விமர்சிக்க துவங்கினர்.
இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: இதனை நான் பயன்படுத்தாமல், சிலர் பயன்படுத்தினால், மக்கள் வேறு மாதிரியாக கேள்வி கேட்பார்கள். வீட்டில் இருப்பவர்கள், அதனை தங்கள் வசதிக்கு ஏற்ப பயன்படுத்துவார்கள். அவர்கள் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும், கழிவறையை பயன்படுத்துவர். ஓய்வறைக்கு செல்வார்கள். ஆனால், நான் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளேன். நான் வீட்டிற்கு சென்றால், நான் சாப்பிடவும், ஓய்வெடுக்கவும் சென்றதாக பத்திரிகையாளர்கள் விமர்சிப்பார்கள்.
இன்னும் சிலர் இந்த வாகனத்தின் விலை ரூ.4 கோடி எனவும், தினசரி வாடகைக்கு ரூ.25 லட்சம் எனவும் கூறுகின்றனர். அது உண்மை என்றால், அந்த பணத்தை என்னிடம் கொடுங்கள். அதனை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். மக்களை எவ்வளவு நாள் முட்டாள் ஆக்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

