டில்லியில் ரூ.900 கோடி மதிப்பு கொக்கைன் பறிமுதல்: இருவர் கைது
டில்லியில் ரூ.900 கோடி மதிப்பு கொக்கைன் பறிமுதல்: இருவர் கைது
ADDED : நவ 15, 2024 10:19 PM

புதுடில்லி: டில்லியில் மேற்கு பகுதியில் 82 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.900 கோடி என தெரிகிறது.
டில்லியின் மேற்கு பகுதியில் உள்ள நங்லோய் மற்றும் ஜனக்புரி பகுதிகளில் உள்ள கூரியர் அலுவலகங்களில் 82 கிலோ கொக்கைனை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி கொண்டு செல்லப்பட இருந்தது தெரிந்தது. இது தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கொக்கைனின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.900 கோடி என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஒரே நாளில் அதிகளவு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்க மோடி அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. டில்லியில் ரூ.900 கோடி மதிப்பு கொக்கைன் கூரியர் அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருட்கள் நடமாட்டம் எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டை தொடரும். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு பாராட்டுகள். இவ்வாறு அந்த பதிவில் அமித்ஷா கூறியுள்ளார்.