'திருமணத்தை மீறிய கள்ள உறவை தற்கொலைக்கு துாண்டியதாக கருத முடியாது'
'திருமணத்தை மீறிய கள்ள உறவை தற்கொலைக்கு துாண்டியதாக கருத முடியாது'
ADDED : மே 13, 2025 10:13 PM

இந்தியா கேட்:'கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை கணவன் துன்புறுத்தவில்லை என்றால், அவரது தற்கொலையை துாண்டியதாக கணவனை குற்றஞ்சாட்ட முடியாது' என, டில்லி உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் 18ம் தேதி கணவன் வீட்டில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார். இயற்கைக்கு மாறான மரணம், தற்கொலைக்குத் துாண்டியது, வரதட்சணை மரணம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து கணவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் மீது விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜாமின்கோரி, உயர் நீதிமன்றத்தில் கணவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்து வந்தார். கணவருக்கு ஜாமின் வழங்கி, அவர் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர், திருமணத்திற்கு மாறான உறவில் இருந்ததற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த தொடர்புக்கும் வரதட்சணை கோரிக்கைக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படவில்லை.
கள்ளத்தொடர்பு காரணமாக மனைவியை மனுதாரர் துன்புறுத்தியதாக அரசு தரப்பில் நிரூபிக்கப்படவில்லை. கள்ளத்தொடர்புக்கும் வரதட்சணை கோரிக்கைக்கும் தொடர்பு இல்லாத நிலையில், வரதட்சணை மரணத்திற்கு கணவரை சிக்கவைக்க அது ஒரு காரணம் அல்ல.
கள்ள உறவு வைத்திருந்தார் என்பதற்காக மனைவியை கொடுமைப்படுத்தியதாகவோ தற்கொலையை துாண்டியதாகவோ கருதப்படாது.
கொடுமைப்படுத்தாவிடில், திருமணத்தை மீறிய உறவு, தற்கொலையை துாண்டுவதாகவோ தவறு என்றோ சட்டப்படி கருதப்படாது.
அந்தப் பெண் உயிருடன் இருந்தபோது, அந்தப் பெண்ணோ அல்லது அவரது குடும்பத்தினரோ வரதட்சணை புகாரோ கொடுமைப்படுத்துவதாக புகாரோ அளிக்கவில்லை. எனவே வரதட்சணை தொடர்பான துன்புறுத்தல் கோரிக்கையின் உடனடித்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை முதற்கட்டமாக நீர்த்துப்போகச் செய்கிறது.
மனுதாரரை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது, எந்த நோக்கத்திற்கும் உதவாது. விசாரணை விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை.
ஆதாரங்களை சிதைப்பதற்கோ அல்லது நீதியிலிருந்து தப்பிச் செல்வதற்கோ எந்த வாய்ப்பும் இல்லை.
இவ்வாறு தன் தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.