ஒரே கல்லில் 2 மாங்காய்; திருப்பதி லட்டு விவகாரத்தில் ஜெகனை வீழ்த்தினார் சந்திரபாபு!
ஒரே கல்லில் 2 மாங்காய்; திருப்பதி லட்டு விவகாரத்தில் ஜெகனை வீழ்த்தினார் சந்திரபாபு!
UPDATED : செப் 20, 2024 08:21 AM
ADDED : செப் 20, 2024 07:47 AM

அமராவதி: திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்படுவதாக புகார் கிளப்பிய சந்திரபாபு நாயுடு, ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து வீழ்த்தியுள்ளார்.
உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு தினமும் பல்லாயிரம் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். திருப்பதி வரும் பக்தர்கள் அனைவரும் தவறாமல் இங்கு விநியோகம் செய்யப்படும் பிரசாத லட்டு தவறாமல் வாங்கிச் செல்வர். நாளொன்றுக்கு மூன்று லட்சம் லட்டுகள் இங்கு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.
திருப்பதி லட்டு பிரசாதத்துக்கு பக்தர்கள் மத்தியில் இருக்கும் டிமாண்ட் காரணமாக, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதெல்லாம் கூட நடக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தான், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதிர வைக்கும் குற்றச்சாட்டை கிளப்பினார்.
பக்தர்கள் புனிதமானதாக கருதும் திருப்பதி லட்டு பிரசாதத்தில், முந்தைய ஜெகன் ரெட்டி ஆட்சியில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது என்பது அவரது குற்றச்சாட்டு.
அவர் புகார் கிளப்பிய மறுநாளே திருப்பதி லட்டு தொடர்பான ஆய்வக அறிக்கையும் வெளியானது. அதில், மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு ஆகியவற்றின் தடயங்கள் திருப்பதி லட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 'முந்தைய ஆட்சியில் இப்படி அநியாயம் செய்தனர்; நாங்கள் அதை தரமானதாக மாற்றி நெய் மட்டுமே லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டோம் என்றார் சந்திரபாபு நாயுடு.
இப்படி திடுக்கிடும் குற்றச்சாட்டு கிளம்பியதில், சந்திரபாபு நாயுடுவுக்கு இரண்டு பலன்கள் உள்ளன. பக்தர்கள் மத்தியில் ஜெகன்மோகன் ரெட்டி மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது; தேர்தலில் தோல்வியடைந்த ஜெகன், மீண்டும் ஆந்திர அரசியலில் தலையெடுக்க முடியாத வகையிலான சிக்கலை இந்த விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் மகன் கொந்தளிப்பு
சந்திரபாபு நாயுடுவின் மகனும், ஆந்திர பிரதேச ஐ.டி., அமைச்சருமான நாரா லோகேஷ் கூறியதாவது: 'திருமலை கோவில் மிகவும் புனிதமானது. ஜெகன் மோகன் ரெட்டி நிர்வாகம் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியது அவமானம். அவர்களின் அரசால் கோடிக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க முடியவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்' என்றார்
நடவடிக்கை உறுதி!
தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது: ஓய்.எஸ்.ஆர்.,கட்சி ஊழலில் ஈடுபட்டது எங்களுக்கு எப்போதும் தெரியும். ஆனால் அவர்கள் திருப்பதியில் இதைச் செய்வார்கள் என்று நினைக்கவில்லை. மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தெய்வம் புனிதமானது மற்றும் சிறப்பு வாய்ந்தது.
இப்போது ஆய்வறிக்கை விலங்குகளின் கொழுப்பு இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது ஆரம்பம் என்று எங்களுக்குத் தெரியும். மேலும் உண்மை சம்பவங்கள் வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.
இருப்பினும், ஓய்.எஸ்.ஆர். காங். கட்சியின் ஒய்.வி.சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ' தெலுங்கு தேசம் கட்சி அரசியல் லாபத்திற்காக பொய் சொல்கிறது. கோவிலின் புனிதத்தையும், கோடிக்கணக்கான பக்தர்களின் புனிதத்தையும் சேதப்படுத்தியவர் சந்திரபாபு நாயுடுதான். அவர் அரசியல் ஆதாயத்திற்காக எந்த மோசமான செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
சி.பி.ஐ., விசாரணை கோரும் காங்.,
இதற்கிடையில், காங்கிரசும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளது. காங்கிரஸின் மாநில தலைவரும் ஜெகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா கூறியதாவது: இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான தகவல்கள் வெளியாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
ஹிந்துக்கள் வழிபடும் தெய்வத்தின் புனிதத்தை நாசம் செய்யும் வகையில் இந்த செயல் நடந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளில் அரசியல் கோணங்கள் இல்லை. யார் பொறுப்பு என்று கண்டுபிடியுங்கள்' என்றார். இந்த விவகாரம் தான் இப்போது ஆந்திர அரசியலில் ஹாட் டாபிக்காக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது.