அனில் அம்பானியின் உதவியாளர் கைது; பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை
அனில் அம்பானியின் உதவியாளர் கைது; பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை
ADDED : அக் 11, 2025 09:29 AM

புதுடில்லி: பணமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி, 66. இவருக்கு சொந்தமான, 'ராகாஸ்' நிறுவனங்களுக்கு, 'யெஸ்' வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணையில், அனில் அம்பானி ரூ.17 ஆயிரம் கோடி பண மோசடி செய்து விட்டதாக இரண்டு வழக்குகளை சி.பி.ஐ., பதிவு செய்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இவரது வீடு, அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அவருக்கு அமலாக்கத்துறை நேரில் ஆஜர் ஆகுமாறு சம்மன் அனுப்பி இருந்தது. அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார்.
இந்த வழக்கில் இன்று அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, இந்த வழக்கில், ரிலையன்ஸ் பவர் நிறுவனம் போலி வங்கி உத்தரவாதம் பெற உதவியதாக, 'பிஸ்வால் டிரேட்லிங்க்' என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பார்த்தசாரதி பிஸ்வால் என்பவரை அமலாக்கத்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.