அன்னாவை கைதுசெய்தது ஜனநாயக விரோதம்: ராம்தேவ் பேச்சு
அன்னாவை கைதுசெய்தது ஜனநாயக விரோதம்: ராம்தேவ் பேச்சு
UPDATED : ஆக 17, 2011 04:37 PM
ADDED : ஆக 17, 2011 04:10 PM

புதுடில்லி: ஹசாரே கைது செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு விரோதமானது என யோகா குரு பாபாராம்தேவ் கூறியுள்ளார்.
உண்ணாவிரதம் இருக்க முயன்ற சமூக சேவகர் அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை அதிகாரிகள் விடுதலை செய்தனர். ஆனால் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கொடுத்தால் மட்டுமே சிறையிலிருந்து வெளியேறுவேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் திகார் சிறையில் உள்ள ஹசாரேவை சந்திக்க யோகாகுரு பாபா ராம்தேவ் வந்தார். ஆனால் அவரை அனுமதிக்க சிறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இதனை தொடர்ந்து சிறை முன்பு கூடியிருந்த ஹசாரே ஆதரவாளர்களிடையே பேசிய ராம்தேவ், ஹசாரே கைது செய்யப்பட்டது ஜனநாயக விரோதமானது. வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி ஹசாரே போராடி வருகிறார். அவரது லட்சியம் நிறைவேறும். தேசிய உணர்வாளர்களும், நாட்டு மக்களும் அவருக்கு ஆதரவாக உள்ளனர் என கூறினார்.
முன்னதாக ஹசாரே கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலையில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலைசந்தித்து பாபா ராம்தேவ் மனு கொடுத்தார்.
அன்னாவை சந்திக்க ராம்தேவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீரவிசங்கருக்கு அன்னாவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.

