அண்ணாமலை தமிழக முதல்வராவார் கர்நாடகாவின் வினய் குருஜி ஆரூடம்
அண்ணாமலை தமிழக முதல்வராவார் கர்நாடகாவின் வினய் குருஜி ஆரூடம்
ADDED : ஜன 29, 2024 07:28 AM

சிக்கமகளூரு: ''வரும் நாட்களில் அண்ணாமலை, தமிழக முதல்வர் பதவியில் அமர்வார்,'' என, கர்நாடகாவின் அவதுாத வினய் குருஜி ஆரூடம் கணித்தார்.
ஐ.பி.எஸ்., அதிகாரியான அண்ணாமலை, கர்நாடகாவின், சிக்கமகளூரு மாவட்ட எஸ்.பி., உட்பட பல்வேறு பதவிகளை வகித்தவர். போலீஸ் துறை பணியை ராஜினாமா செய்த இவர், பா.ஜ.,வில் இணைந்தார். தற்போது தமிழக பா.ஜ., தலைவராக பதவி வகிக்கிறார்.
இவர் தமிழக முதல்வர் பதவியில் அமர வாய்ப்புள்ளதாக, கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற ஆன்மிகவாதியும், ஜோதிடருமான வினய் குருஜி ஆரூடம் கூறியுள்ளார்.
சிக்கமகளூரு, கடூரின், யகடியில் நேற்று நடந்த கவிஞர் குமாரவியாசர் ஜெயந்தி நிகழ்ச்சியில், வினய் குருஜி பங்கேற்றார். அவர் பேசியதாவது:
இதற்கு முன்பு சிக்கமகளூரில், அண்ணாமலையை சந்தித்தபோது, 'நீங்கள் எதிர்வரும் நாட்களில், தமிழக முதல்வர் ஆவீர்கள்' என, வாழ்த்து கூறினேன். நான் அவரை சந்தித்த போதெல்லாம், இரண்டு ஆப்பிள் பழங்களை கொடுத்து, அவரை ஆசிர்வதித்தேன்.
தமிழகத்தில் தர்மம் வளர்கிறது. காக்கி சீருடை அணிந்த அண்ணாமலை, தற்போது கதர் அணிந்துள்ளார். தமிழக பா.ஜ., தலைவராக பதவி வகிக்கிறார். இவர் அவ்வப்போது திருவண்ணாமலைக்குச் சென்று, தரிசனம் செய்கிறார். இவர் தமிழக முதல்வராவார்.
இவ்வாறு அவர் கூறினார்.