மேலும் ஒரு வங்கதேசத்தவர் நாடு கடத்தல்: 3 நாட்களில் 30 பேர் அனுப்பிவைப்பு
மேலும் ஒரு வங்கதேசத்தவர் நாடு கடத்தல்: 3 நாட்களில் 30 பேர் அனுப்பிவைப்பு
ADDED : ஜன 02, 2025 05:06 PM

புதுடில்லி: சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தைச் சேர்ந்த மேலும் ஒருவரை இன்று நாடு கடத்தியது டில்லி போலீஸ்.
இத்துடன் போலி ஆவணங்களின் அடிப்படையில் வங்கதேச நாட்டவர்களுக்கு ஆதார் அட்டைகள் மற்றும் பிற அரசாங்க அடையாள அட்டைகளை வழங்கிய ஒரு கும்பலையும் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து டில்லி போலீசார் கூறியதாவது:
வங்கதே பிரஜையான முகமது பப்லு, எந்த ஆதாரமும் இல்லாமல் தங்கியிருந்த நிலையில் வசந்த் குஞ்ச் பகுதியில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தின் (எஃப்ஆர்ஆர்ஓ) உதவியுடன் அவரை மீண்டும் வங்கதேசத்துக்கு நாடு கடத்தியுள்ளோம்.
லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனாவின் உத்தரவைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிந்து நாடு கடத்துவதற்காக டில்லி காவல்துறையால் தொடங்கப்பட்ட இரண்டு மாத சரிபார்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்தக் கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய பின்னர், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு போலி பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் பிற அரசாங்க அடையாள அட்டைகளை வழங்க கும்பல் போலி இணையதளத்தைப் பயன்படுத்தியது தெரியவந்தது.
இத்துடன் மொத்தம் 3 நாட்களில் 30 பேர் இதுவரை வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு டில்லி போலீசார் கூறினர்.