'நந்தினி' ரண்டி; நாயுடு தந்தார் கேரண்டி; திருப்பதி லட்டு விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம்!
'நந்தினி' ரண்டி; நாயுடு தந்தார் கேரண்டி; திருப்பதி லட்டு விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம்!
ADDED : செப் 20, 2024 06:35 PM

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதம் தயாரிக்க கர்நாடகாவில் உள்ள நந்தினி பிராண்டு நெய்யை வாங்க தொடங்கி உள்ளோம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார்.
விலங்கு கொழுப்பு
ஆந்திராவில் உள்ள திருப்பதி லட்டு பிரசாதம் புகழ்பெற்றது. திருப்பதி கோவிலுக்கு செல்வோர்களின் ஆன்மிக பயணம் லட்டு இன்றி முழுமை பெறாது. அப்படி புகழ்பெற்ற லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய்யை ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் உபயோகித்ததாக குற்றம்சாட்டி இருந்தார், முதல்வர் சந்திரபாபு. கலப்பட நெய், விலங்கு கொழுப்பு என்ற லட்டு விவகாரம், பக்தர்களை அலற வைத்தது.
மறுப்பு
முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு உண்மையே என்று திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவும் தெளிவுப்படுத்தி இருந்தார். ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
நந்தினி
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயாரிக்க கர்நாடகாவில் உள்ள நந்தினி பிராண்டு நெய்யை வாங்க தொடங்கி உள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார். அவர் மேலும் கூறி உள்ளதாவது;
தரமில்லாத நெய்
சந்தையில் ஒரு கிலோ நெய் ரூ. 500 என்றிருக்கும் போது, முந்தைய ஆட்சியில் தரம் குறைந்த ரூ.320 விலையில் விற்கப்படும் நெய் வாங்கப்பட்டு உள்ளது. விலை குறைவு என்பதால் தரமில்லாத நெய்யை வாங்கி உள்ளனர்.
காப்பாற்ற வேண்டுமா?
லட்டு விவகாரத்தில் தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாக மக்கள் கூறுகின்றனர். மன்னிக்க முடியாத தவறுகள் நடந்தால் அவர்களை நான் காப்பாற்ற வேண்டுமா? தற்போது நெய் விநியோகிப்பாளரை மாற்றிவிட்டோம். இப்போது கர்நாடகாவில் உள்ள நந்தினி பிராண்டு நெய்யை வாங்க தொடங்கி உள்ளோம்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறி உள்ளார்.
பால் உற்பத்தியாளர்கள்
திருப்பதி லட்டு பிரசாதம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவும் இந்த விவகாரத்தில் புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது. கர்நாடகாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நந்தினி பிராண்ட் நெய்யை பயன்படுத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஆய்வு
இது குறித்து அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறி உள்ளதாவது; இது பற்றிய சுற்றறிக்கை ஓரிரு நாட்களில் அனைத்து கோயில்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். முக்கிய கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தையும் நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.