ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவரின் மேல் முறையீட்டு மனு முடித்து வைப்பு
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதானவரின் மேல் முறையீட்டு மனு முடித்து வைப்பு
ADDED : மார் 18, 2025 06:37 AM

புதுடில்லி : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவரின் மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று முடித்து வைத்தது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு சென்னையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய, குற்றம் சாட்டப்பட்ட நபரான நாகேந்திரன் வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி, அவரது மனைவி விசாலாட்சி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்றத்தால் இந்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இதற்கு எதிராக விசாலாட்சி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய அறிவுறுத்தி, மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.