அடக்கொடுமையே...மக்கள் தொகையை மிஞ்சிய விண்ணப்பங்கள்; அதிர்ச்சியில் அசாம் முதல்வர்
அடக்கொடுமையே...மக்கள் தொகையை மிஞ்சிய விண்ணப்பங்கள்; அதிர்ச்சியில் அசாம் முதல்வர்
ADDED : செப் 08, 2024 09:01 AM

குவஹாத்தி: அசாமில் மக்கள் தொகையை விட கூடுதலானோர் ஆதார் கேட்டு விண்ணத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி
சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கும் வகையில், தேசிய குடியுரிமை பதிவேட்டில் பதிவு செய்வதற்காக, மக்கள் ஆதார் அட்டைகளை சமர்ப்பிக்குமாறு அசாம் மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இது அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சந்தேகம்
மாநிலத்தில் உள்ள மக்கள் தொகையை காட்டிலும் கூடுதலானோர் ஆதார் கார்டுகளை சமர்பித்திருப்பது, சட்டவிரோதமாக மக்கள் ஊடுவிருக்கலாம் என்ற சந்தேகத்தை உண்டாக்கியுள்ளதாக முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
4 மாவட்டங்கள்
இது தொடர்பாக அவர் கூறியதாவது: மாநிலத்தின் மக்கள் தொகையை விட அதிகமானோர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, துப்ரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே மக்கள் தொகையை விட கூடுதலாக ஆதார் கார்டுகளை சமர்பித்துள்ளனர். எனவே, சட்டவிரோதமாக சிலர் குடியேறியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அந்த மாவட்டங்களில் மீண்டும் தேசிய குடியுரிமை பதிவுக்காக மீண்டும் விண்ணப்பங்களை பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான அறிவிப்பு 10 நாட்களுக்குள் வெளியாகலாம்.
கட்டாயம்
தேசிய குடியுரிமை பதிவுக்கு விண்ணப்பிக்காதவர்கள், புதிதாக ஆதார் கார்டுகளை பெற விண்ணப்பிக்க முடியாது. இந்த விதிமுறைகள் தேயிலை தோட்டப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பொருந்தாது. அக்டோபர் 1ம் தேதி முதல் பிற மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும்.
அவசியமில்லை
என்.ஆர்.சி., பதிவேற்றத்தின் போது கைவிரல் ரேகையை பதிவு செய்த, 9.55 லட்சம் பேர் மீண்டும் தங்களின் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இவர்கள் எந்தவித நிபந்தனையுமின்றி ஆதார் அட்டைகளை பெறுவார்கள் எனக் கூறினார்.