பதவிக் காலத்தை முழுமையாக முடிக்காதஷிமோகா மாவட்டத்தை சேர்ந்த 3வது நபர்
பதவிக் காலத்தை முழுமையாக முடிக்காதஷிமோகா மாவட்டத்தை சேர்ந்த 3வது நபர்
ADDED : ஜூலை 31, 2011 10:55 PM
பெங்களூரு:ஐந்தாண்டு கால பதவிக்காலத்தை முழுமையாக முடிக்காத, ஷிமோகா
மாவட்டத்தைச் சேர்ந்த மூன்றாவது முதல்வர் எடியூரப்பா என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.கர்நாடக முதல்வர் எடியூரப்பா, நேற்று தன் பதவியை
ராஜினாமா செய்தார். இதன் மூலம், கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தைச்
சேர்ந்த, முதல்வர் பதவியில் முழுமையாக ஐந்தாண்டுகளை நிறைவு செய்யாதவர்கள்
பட்டியலில், மூன்றாவதாக எடியூரப்பா இணைந்துள்ளார். முன்னதாக, ஷிமோகா
மாவட்டத்தைச் சேர்ந்த பங்காரப்பா, ஜே.எச். பாட்டீல் ஆகியோரும், முதல்வர்
பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்களின் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு
செய்யாமல் பதவி விலகினர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பங்காரப்பா, 1990ம் ஆண்டு முதல்வராக
பொறுப்பேற்றார். எனினும், கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்படி, 1992ம்
ஆண்டு, தன் பதவியை ராஜினாமா செய்தார். மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர்
தேவகவுடா, கடந்த 1997ம் ஆண்டு பிரதமராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து, அவர்
வகித்து வந்த முதல்வர் பதவிக்கு ஜே.எச்.பாட்டீல் தேர்வு செய்யப்பட்டார்.
எனினும், 1999ம் ஆண்டு சட்டசபை கலைக்கப்பட்டதையடுத்து, அவர் பதவியை
இழந்தார்.
இதே போன்று கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தரம்சிங்,
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த குமாரசாமி ஆகியோரும் பதவிக்காலத்தை
முழுவதும் முடிக்காமல் பதவி விலகியுள்ளனர்.