ADDED : அக் 18, 2024 11:01 PM

அசைவ உணவு பிரியர்களுக்கு இறைச்சியை பயன்படுத்தி செய்யும் உணவு வகைகள், சூப் மிகவும் பிடிக்கும்.ஆட்டு இறைச்சி மூலம் தயாரிக்கும் கறி கஞ்சியை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி 200 கிராம், பாசிப்பருப்பு 50 கிராம், கேரட், முட்டைக்கோஸ், தக்காளி, கால் டீஸ்பூன் மஞ்சள் துாள், மிளகாய் துாள். கெட்டியான தேங்காய் பால் இரண்டு கிளாஸ், எலும்பு நீக்கிய ஆட்டு இறைச்சி 100 கிராம், சீரகத்துாள் கால் டீஸ்பூன், சோம்பு, கொத்துமல்லி பவுடர் கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு பேஸ்ட் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பட்டை ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் தேவைப்படும் அளவு.
செய்முறை:
வாய் நன்கு அகண்ட பாத்திரத்தில் கழுவிய பாஸ்மதி அரிசி, பாசிப்பருப்பு, நறுக்கிய காய்கறிகள், மஞ்சள் துாள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு வேகவைத்து, பின் இறக்கி ஆற விடவும்.
மற்றொரு பாத்திரத்தில் கழுவிய இறைச்சியுடன், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, மிளகாய் துாள், மஞ்சள் துாள், சீரகத்துாள், சோம்புத்துாள், தனியா துாள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
இறைச்சி நன்கு வெந்ததும் அதன் தண்ணீரை மட்டும் வடித்துவிட்டு, இறைச்சியை நன்கு ஆறவிட்டு மிக்சியில் மையாக அரைத்துக் கொள்ளவும். இதேபோல் பொங்கிய அரிசி கலவையையும் மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த இரண்டையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து கரண்டியால் நன்கு கலக்கவும். இப்போது தேங்காய்ப்பால், இறைச்சியை அவித்த தண்ணீரை சேர்த்து ஊற்றி, உப்பு சேர்த்து கஞ்சி பக்குவத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும். இறுதியில் பட்டை, கிராம்பு, ஏலக்காயை தாளித்து அதனுடன் சேர்த்து விடவும். சுவையான கறிக்கஞ்சி தயார்
- நமது நிருபர் -.