பான் கார்டு 2.0 சந்தேகமா.... இதோ உங்களுக்கான பதில்!
பான் கார்டு 2.0 சந்தேகமா.... இதோ உங்களுக்கான பதில்!
ADDED : நவ 26, 2024 10:15 PM

புதுடில்லி: பான் கார்டு 2.0 வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
இப்போது இருக்கும் பான் கார்டு, செல்லுமா, செல்லாதா?
பதில்: செல்லும்.
பான் நம்பர் அல்லது பான் கார்டை மாற்ற தேவையில்லை. நம்மிடம் உள்ள பான் கார்டுகள் புதிய முறைப்படி, சிக்கல் இல்லாமல் ஒருங்கிணைக்கப்படும்.
புதிய பான் கார்டு கிடைக்குமா?
பதில்: கிடைக்கும்.
பான் கார்டு வைத்திருப்போருக்குக் கூடுதலான அம்சங்களுடன் கூடிய புதிய பான் கார்டு கிடைக்கும் .
மேம்படுத்தப்பட்ட பான் கார்டில் உள்ள புதிய அம்சங்கள் என்ன?
பான் 2.0 கார்டில் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் இருக்கும். விரைவான சரிபார்ப்புக்கு க்யூ.ஆர் குறியீடு வசதியும் உள்ளதாக இருக்கும்.
பான் 2.0ல் வரும் பெரிய மாற்றங்கள் ஏன் முக்கியம்? யாருக்கெல்லாம் பயன் கிடைக்கும்? புதிய பான் கார்டுகளை பெறக் கட்டணம் செலுத்த வேண்டுமா?
பதில் :
இந்த மேம்படுத்தப்படுதல் என்பது இலவசமாகச் செய்து தரப்படுவதுதான்.
ஏற்கனவே பான் வைத்திருப்போர் புதிய பான் கார்டுக்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா?
பதில்: இல்லை.
தற்போதுள்ள பான் கார்டுகளே செல்லுபடியாகும். புதிய கார்டுகள் ரெடியான உடன் அவை இலவசமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
பொதுமக்களுக்கு என்ன லாபம்?
இந்த பான் 2.0 திட்டம் டிஜிட்டல் இந்தியா திட்டத்துடன் இணைக்கப்படும். எனவே, அரசு நிறுவனங்களிடம் இருந்து மக்களுக்கு வரும் தொடர்புகளில் பொதுவான அடையாளமாக பான் பயன்படுத்தப்படும். இதன் மூலம் பான் சேவைகளை மக்கள் மிக விரைவாகவும் எளிதாகவும் பெற முடியும்.
தொழில் நிறுவனங்களுக்கு என்ன பயன்?
பான் மற்றும் டான் சேவைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் தொழில் நிறுவனங்களும் பயனடையும்.
அனைத்து வகையான சேவைகளுக்கும் ஒரு ஒருங்கிணைந்த போர்ட்டல் நிறுவப்படும். இதன் மூலம் பான் சார்ந்த சிக்கல்களை எளிதாக சரிப்படுத்த முடியும்.