ADDED : பிப் 26, 2024 02:45 AM

இம்பால் : வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கூகி மற்றும் மெய்டி இன மக்களிடையே இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மோதல் வெடித்தது.
இதில் ஏற்பட்ட கலவரத்தில், 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து வன்முறையை தடுக்கும் வகையில் அடிக்கடி போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
நேற்று சுரச்சந்திரபூர் மாவட்டத்தில் ஹாலோன்ஜங்க் மற்றும் மோல்ஜங்க் ஆகிய இரு கிராமங்களில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஹாலோன்ஜங்க் கிராமத்தில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் கள்ள நோட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மோல்ஜங்க் பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் 10 துப்பாக்கிகள், ஜெலட்டின் குச்சிகள், ஏராளமான வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
மேலும் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் இம்பால் மேற்கு மாவட்டத்தின் கெய்சாம்பட் ஜங்ஷனில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

