விமானத்தில் நடுவானில் மயங்கிய பயணி: உடனடி சிகிச்சை அளித்து காப்பாற்றிய ராணுவ டாக்டருக்கு குவிகிறது பாராட்டு
விமானத்தில் நடுவானில் மயங்கிய பயணி: உடனடி சிகிச்சை அளித்து காப்பாற்றிய ராணுவ டாக்டருக்கு குவிகிறது பாராட்டு
ADDED : ஜூலை 19, 2025 10:30 PM

புதுடில்லி: விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பயணி ஒருவருக்கு, ராணுவத்தில் டாக்டராக பணியாற்றும் மேஜர் முகுந்தன் அளித்த தொடர் சிகிச்சை காரணமாக, பயணி உயிர் பிழைத்தார். இதனையடுத்து அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
கடந்த 14 ம் தேதி சென்னையில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சென்று கொண்டு இருந்தது. விமானம் பறந்து கொண்டிருந்த போது, மாலை 6:20 மணியளவில் அதில் இருந்த 75 வயதான பயணிக்கு திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர் சுயநினைவை இழந்ததுடன், அதிக வியர்வை, நாடித்துடிப்பு குறைந்தது மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைந்தது தெரியவந்தது. விமான குழுவினர் உடனடியாக ஆக்ஸிஜன் வழங்கி மருத்துவ உதவியை கோரினர்.
அப்போது, விடுப்பை முடித்துக் கொண்டு பணிக்கு திரும்பிய ராணுவ டாக்டர் மேஜர் முகுந்தன் அவர்களுக்கு உதவினார். அவர் நோயாளியை பரிசோதித்த பின்னர், சர்க்கரை மற்றும் ஓஆர்எஸ் கரைசலை வாய்வழியாக கொடுத்தார். அவரது உடல்நிலை மற்றும் ஆக்ஸிஜன் அளவையும் கண்காணித்து வந்தார்.
விமானம் கவுகாத்தியில் தரையிறங்கியதும், நோயாளி விமான நிலைய அவசர அறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் முகுந்தன் தொடர் சிகிச்சை அளித்தார். இதனால், இரவு 8:00 மணியளவில் நோயாளி இயல்பு நிலைக்கு திரும்பினார். ராணுவ மேஜர் முகுந்தனின் விரைவான மற்றும் தன்னலமற்ற நடவடிக்கை, விமானக் குழுவினரின் உடனடி உதவி காரணமாக பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டதாக இந்திய ராணுவம் பெருமிதம் தெரிவித்துள்ளது.