காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; ராணுவ வீரர் வீரமரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; ராணுவ வீரர் வீரமரணம்
UPDATED : ஏப் 24, 2025 12:24 PM
ADDED : ஏப் 24, 2025 10:45 AM

ஸ்ரீநகர்: பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு, இன்று (ஏப்ரல் 24) காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர். இதில், ராணுவ வீரர் ஜந்து அலி ஷேக் வீரமரணம் அடைந்தார்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
பயங்கரவாதிகளுக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர்.
உதம்பூர் அருகே பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது என அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். அப்பாவி சுற்றுலா பயணிகளை கொன்ற, பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்த ராணுவத்தினர் போராடி வருகின்றனர்.
இதில், வைட்நைட் கார்ப்ஸ் படைப்பிரிவின் வீரர் ஜந்து அலி ஷேக் வீர மரணம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும் உயிரிழந்து விட்டார் என்று ராணுவம் அறிவித்துள்ளது. தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
இது குறித்து ராணுவ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திய போது, ராணுவ வீரர் ஜந்து அலி ஷேக் வீர மரணம் அடைந்தார்.
அவரது அசாத்திய தைரியமும், அவரது வீரமும் என்றும் மறக்க முடியாதது. துக்கத்தின் இந்த தருணத்தில் இறந்த குடும்பத்தினருக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.